Saturday, October 10, 2020

 நவ திருப்பதி எம்பெருமான்களின் ஒன்பது கருட ஸேவை ஆழ்வார் திருநகரியில். நாளை (30.05.2020) நடைபெற வேண்டிய இந்த ஒன்பது கருட ஸேவை இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

 

நவ திருப்பதிகள் – ஸ்ரீ.வைகுண்டம், வரகுணமங்கை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி, திருப்புளிங்குடி, தென்திருப்பேரை, பெருங்குளம், இரட்டைத்திருப்பதியாகிய ஸ்ரீ.தேவர் பிரான், ஸ்ரீ.அரவிந்தலோசனன் அவதார ஸ்தலங்கள். இந்த நவதிருப்பதிகளும் நவக்ரஹ ஸ்தலங்களாக இருக்கின்றன.

அவை :-

ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீ.வைகுண்டனாதன், ஸ்ரீ.வைகுண்டவல்லித் தாயார் மூலவர்களாகவும், ஸ்ரீ.கள்ளர்பிரான், ஸ்ரீ.சோரநாத நாயகித் தாயார் உற்சவர்களாக ஸேவை ஸாதிக்கும் இந்த திவ்ய தேஸம் சூரிய ஸ்தலமாக உள்ளது.

 

நத்தம் என்னும் வரகுணமங்கை திவ்யதேஸ எம்பெருமான் ஸ்ரீ.விஜயாசனப் பெருமாள் மூலவராகவும், ஸ்ரீ.எம்மிடர்கடிவான் உற்சவராகவும், ஸ்ரீ,வரகுணவல்லி மற்றும் ஸ்ரீ.வரகுணமங்கை தாயார்கள் உற்சவர்களாகவும் எழுந்தருளி ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம் சந்திர ஸ்தலமாக உள்ளது.

 

திருக்கோளூர் ஸ்ரீ.வைத்தமாநிதிப் பெருமாள் மூலவர், உற்சவர் நிஷோபவித்தன், ஸ்ரீ.குமுதவல்லித் தாயார், ஸ்ரீ.கோளூர்வல்லி தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம் செவ்வாய் ஸ்தலமாக உள்ளது.

 

திருப்புளிங்குடி ஸ்ரீ.காய்சின வேந்தப் பெருமாளும், உற்சவர் ஸ்ரீ.எம்மிடர் களைவான், ஸ்ரீ.மலர்மகள் தாயார், நிலாமகள் தாயார், ஸ்ரீ.புளிங்குடி தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம் புதன் ஸ்தலமாக உள்ளது.

 

ஆழ்வார்திருநகரி என்று அழைக்கப்படும் திருக்குருகூரில்  மூலவர் ஸ்ரீ.ஆதிநாதப் பெருமாளும், உற்சவர் ஸ்ரீ.பொலிந்து நின்ற பிரானும், ஸ்ரீ.ஆதிநாதத் தாயாரும், ஸ்ரீ.திருக்குருகூர்  தாயாரும் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம், குரு ஸ்தலமாக உள்ளது.

 

தென் திருப்பேரை மூலவர் ஸ்ரீ.மகர நெடுங்குழைக்காதர், உற்சவர் ஸ்ரீ.நிகரில் முகில் வண்ணன் நேமியான், ஸ்ரீ.குழைக்காதுவல்லி தாயார், ஸ்ரீ.திருப்பேரை தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம், சுக்ரன் ஸ்தலமாக உள்ளது.

 

பெருங்குளமாகிய திருக்குளந்தை மூலவர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசப் பெருமாள், உற்சவர் ஸ்ரீ.மாயக்கூத்தன், ஸ்ரீ.அலமேலுமங்கைத் தாயார், ஸ்ரீ.குளந்தைவல்லித் தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம், சனி ஸ்தலமாக உள்ளது.

 

இரட்டைத் திருப்பதியாகிய தொலைவில்லிமங்கலத்தின் ஒரு திவ்யதேஸத்தில் மூலவர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசர், உற்சவர் ஸ்ரீ.தேவர்பிரான் , ஸ்ரீ.அலமேலுமங்கைத் தாயார், ஸ்ரீ.பத்மாவதித் தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம், ராகு ஸ்தலமாக உள்ளது.

 

இரட்டைத் திருப்பதியாகிய தொலைவில்லிமங்கலத்தின் இன்னுமொரு திவ்ய தேஸத்தில் மூலவர் ஸ்ரீ.அரவிந்தலோசனர், உற்சவர் ஸ்ரீ.செந்தாமரைக் கண்ணன், ஸ்ரீ.கருந்தடங்கண்ணி தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம் கேது ஸ்தலமாக உள்ளது.

 

 

 

 

ஸ்ரீ.நம்மாழ்வாரின் திருஅவதார திருநக்ஷத்திரமான வைகாசி விசாக நக்ஷத்திர உற்சவத்தின் ஐந்தாம் நாளன்று, தாமிரபரணி நதிக்கரை பகுதிகளில் சில இடங்களில் உள்ள இந்த ஒன்பது திவ்ய தேஸ எம்பெருமான்களில் எட்டு திவ்ய தேஸ எம்பெருமான்கள் , ஸ்ரீ.ஆதி நாதப் பெருமாள் எழுந்தருளியுள்ள ஸ்தமும் , ஸ்ரீ.நம்மாழ்வார் திருஅவதார ஸ்தலமுமான ஆழ்வார் திருநகரி திவ்ய தேஸத்திற்கு , ஸ்ரீ.நம்மாழ்வாரின் திரு அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் காலையில் எழுந்தருளுவார்கள்.

 

அங்கு காலை எல்லா எம்பெருமான்களுக்கும், ஸ்ரீ.நம்மாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடைபெரும். திருமஞ்சனம் முடிந்த பின்னர் ஸ்ரீ.நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள திருவாய் மொழியின் ஐந்தாம் பத்து ஸ்ரீ.நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கும் இடத்தில் அருளிச் செயல் கோஷ்டியாகும்.

 

 

ஆழ்வார் திருநகரியாகிய திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வார்களின் தலைவனாகிய ஸ்ரீ.நம்மாழ்வார், ஒன்பது கருட ஸேவை முடிந்த அடுத்த நாளான , ஆறாம் நாள் இந்த ஒனபது திவ்ய தேஸ எம்பெருமான் களுக்கும் திருக்கோயிலுக்கு வெளியே மங்களாஸாஸனம் அருளுவார்.

 

இந்த ஒன்பது திவ்ய தேஸங்களையும் ஸ்ரீ.நம்மாழ்வார் அவர் அருளிச் செய்த திருவாய்மொழியில் அருளிச் செய்துள்ளார்.

 

திருக்குருங்கூடி, திருக்கோளூர், திருப்புளிங்குடி, தென் திருப்பேரை, தொலைவில்லிமங்கலம் திவ்ய தேஸங்களைப் பற்றி முழுவதுமாக பதினோறு பாசுரங்களிலும், வைகுண்டம், வரகுணமங்கை மற்றும் திருக்குளந்தை திவ்ய தேஸங்களை ஒன்று முதல் இரண்டு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.

 

அவை :-

திருக்குருங்குடியாகிய ஆழ்வார் திருநகரி, (ஸ்ரீ.ஆதி நாதப் பெருமாள், ஸ்ரீ.பொலிந்து நின்ற பிரான் எம்பெருமான்கள்), திவ்ய தேஸத்தை திருவாய்மொழியின் நான்காம் பத்தின், பத்தாம் திருமொழியின் “ ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்” என்று தொடங்கும் பதினோறு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.

 

திருக்கோளூர் ( ஸ்ரீ.வைத்தமாநிதி பெருமாள்) திவ்ய தேஸத்தை, திருவாய் மொழியின் ஆறாம் பத்தின் ஏழாம் திருமொழியில் “உண்ணும் சோறு, பருகு நீர்” என்று  தொடங்கும் பதினோறு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.

 

திருப்புளிங்கூடி (ஸ்ரீ.காய்சின வேந்தப் பெருமாள், ஸ்ரீ.எம்மிடர் கடிவான் பெருமாள் ) திவ்ய தேஸத்தை திருவாய் மொழியின் ஒன்பதாம் பத்தின் இரண்டாம் திருமொழியின், “ பண்டை நாளாலே நின் திருவருளும் “ என்று தொடங்கும் பதினோறு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.

 

தென்திருப்பேரை ( ஸ்ரீ.மகர நெடுங்குழைக்காதர், ஸ்ரீ.நிகரில் முகில் வண்ணன்) திவ்ய தேஸத்தை, திருவாய் மொழியின் ஏழாம் பத்தின் மூன்றாம் திருமொழியின் “ வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி “ என்று தொடங்கும் பதினோரு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.

 

தொலைவில்லிமங்கலம் ( ஸ்ரீ.ஸ்ரீனிவாசர், ஸ்ரீ.தேவபிரான், ஸ்ரீ.அரவிந்தலோசனர், ஸ்ரீ.செந்தாமரைக் கண்ணன் ) இரட்டை திவ்ய தேஸத்தையும் திருவாய்மொழியின் ஆறாம் பத்தின் ஐந்தாம் திருமொழியில் “ துவளில் மாமணி மாடம் ஓங்கு “ என்று தொடங்கும் பதினோறு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.

 

வரகுணமங்கை திவ்ய தேஸத்தை ( ஸ்ரீ.விஜயாசன பெருமாள், ஸ்ரீ.எம்மிடர் கடிவான் பெருமாள் ) திருவாய்மொழியின் ஒன்பதாம் பத்தின் இரண்டாம் திருமொழியின் நான்காம் பாசுரத்தில் “புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து * வைகுந்தத்துள் நின்று “ என்ற பாசுரத்தி அருளிச் செய்துள்ளார்.

 

வைகுந்தம் திவ்ய தேஸத்தை (ஸ்ரீ.வைகுண்டநாதன் , ஸ்ரீ.கள்ளர்பிரான்) , திருவாய்மொழியின் ஒன்பதாம் பத்தின் இரண்டாம் திருமொழியின் நான் காம் பாசுரத்தில் “புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து * வைகுந்தத்துள் நின்று “ என்ற பாசுரத்திலும் மற்றும் “எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம்” என்ற எட்டாம் பாசுரத்தில் , “திருவைகுந்தத்துள்ளாய் தேவா “ என்று அருளிச் செய்துள்ளார்.

 

பெருங்குளம் என்னும் திருக்குளந்தை (ஸ்ரீ.ஸ்ரீனிவாசர், ஸ்ரீ.மாயக்கூத்தன் ) திவ்ய தேஸத்தை, திருவாய்மொழியின் எட்டாம் பத்தின் இரண்டாம் திருமொழியின் நான் காம் பாசுரமான “ கூடச் சென்றேன் இனி என் கொடுக்கேன் “ என்று தொடங்கும் பாசுரத்தில் “ மாடக் கொடி மதிள் தென்குளந்தை * வண் குடபால் நின்ற மாயக் குத்தன் “ என்று உரைத்துள்ளார்.

பின் குறிப்பு – கடந்த 2015 ஆம் ஆண்டு ஆழ்வார் திருநகரியில் ஒன்பது திவ்ய தேஸ எம்பெருமான்களுக்கு, ஸ்ரீ.நம்மாழ்வார் திரு அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் அன்று காலை சிறிது நேரம் கழித்து சென்றதால் சில எம்பெருமான் களின் திருமஞ்சனங்களை மட்டுமே ஸேவிக்க முடிந்தது. இரவு ஒன்பது எம்பெருமான்களும் கருட வாஹனத்தில் எழுந்தருளி ஸேவை ஸாதித்ததை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றோம். அடுத்து ஆறாம் நாள் காலை ஒன்பது திவ்ய தேஸ எம்பெருமான்களுக்கும் மங்களாஸாஸனம் அருளி, ஸ்ரீ.நம்மாழ்வாருடன் , எம்பெருமான் கள் பிரியா விடை பெற்றதையும் ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றோம்.

 

இன்று ஒன்பது கருட வாஹன ஸேவைகளை பதிவிட்டு , திருமஞ்சனம் மற்றும் மங்களா ஸாஸனம், பிரியாவிடை புகைப்படங்களை பின்னர் பதிவிடிகின்றேன்.

 

நவ திருப்பதி எம்பெருமான்கள் மற்றும் ஸ்ரீ.நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

 

 

 

 

     அருளி எம்பெருமான்களை பிரியா விடை கண்டருளுவார்

பஞ்சத்துவாரகை யாத்திரை

அடியோங்கள் சென்ற 24.02.2017 வரை 102 திவ்யதேஸங்களை ஸேவித்திருந்தோம். கடந்த ஆண்டு பத்ரிநாத் யாத்திரையில் ஆறு வடநாட்டு திவ்யதேஸங்களை ஸேவித்தோம். இந்த ஆண்டு எப்படியும் குறைந்தது ஒரு வடநாட்டு திவ்ய தேஸமாவது, அதிலும் குறிப்பாக பஞ்சத்துவாரகை திவ்யதேஸத்தை ஸேவிக்க எண்ணம் கொண்டோம்.


பஞ்சத்துவாரகைகள் விவரம் - தாகுர் துவாரகா, துவாரகீஸ் ( கோமதி ) துவாரகா,  பேட் துவாரகா, ஸ்ரீநாத்  துவாரகா மற்றும் கங்க்ரோலி துவாரகா. இவற்றில் துவாரகீஸ் துவாரகா என்று அழைக்கப்படும் கோமதி துவாரகா ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் அருளப்பட்ட துவாரகையாகும். ஆனால் மற்றுமுள்ள நான்கு துவாரகைகளையும் ஸேவித்தால்தான் இந்த திவ்ய தேஸத்தை ஸேவித்தது பூர்த்தியாகும். ஆகவே பக்தர்கள் அனைவரும் பஞ்சத்துவாரகைகளையும் ஸேவித்து எம்பெருமான் ஸ்ரீ.கிருஷ்ணரை அனுபவிப்பார்கள்.


ஐந்து பஞ்சதுவாரகைகளில் மூன்று துவாரகைள் ( தாகுர் துவாரகா, கோமதி துவாரகா, பேட் துவாரகா ) குஜராத் மாநிலத்திலும், ஸ்ரீநாத் துவாரகாவும், கங்க்ரோலி துவாரகாவும் ராஜஸ்தான் மாநிலத்திலும் அமைந்துள்ளது. இரண்டு மாநிலங்களில் உள்ள பஞ்சதுவாரகைகளை ஸேவிப்பதற்கு குறைந்தது ஏழு நாள்களாவது தேவை. ஏனென்றால் முதல் மூன்று துவாரகைகள் 100 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ளதென்றாலும் , மற்ற இரண்டு துவாரகைகளை ஸேவிப்பதற்கு குறைந்தது 700 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். மேலும் பேட் துவாரகை ஸேவிக்க அரபிக் கடலுக்குள் சுமார் ஒரு அரை மணி நேரம் படகில் சென்று ஸேவிக்க வேண்டும். இதற்கே ஒரு அரைநாளுக்கு மேல் தேவைப்படும். வழியில் சில புராண திவ்ய ஸ்தலங்களையும் , ஜெய்பூர்நகரில் அமைந்துள்ள ஸ்வயம்வக்த க்ஷேத்திரமான புஷ்கர் , மஹாபாரத யுத்தம் நடைபெற்ற இடமான குருஷேத்திரம் ஆகிய ஸ்தலங்களையும் ஸேவிக்க வேண்டியிருப்பதால் மொத்தம் 16 நாள்கள் இந்த பஞ்சதுவாரகை யாத்திரையை நிறைவு செய்ய தேவைப்படும்.


இனி அடியோங்கள் பஞ்சத்துவாரகை யாத்திரை பற்றிய விவரம் - மொத்த யாத்திரையினையும் ஒரு சேர பதிவிட இயலாது என்ற காரணத்தினால் அடியோங்கள் ஸேவித்த ஒவ்வொரு ஸ்தலங்கள் பற்றி தொடர்ந்து பதிவிடுகிறோம் -  :-


முதலில் மராட்டிய மாநிலம் ஷோலாப்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஸ்தலமான ஸ்ரீ.விட்டலபாண்டுரங்கண் திருக்கோயில் பற்றியும் , பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஸ்தலம் பற்றியும் அடியேன் மனதில் பட்டதை விவரிக்கிறேன்.

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து , மும்பை விரைவு ரயிலில் புறப்பட்டு, மறுநாள் காலை சுமார் 5.30 மணியளவில் மராட்டிய மாநிலம் ஷோலாப்புரை சென்றடைந்தோம். இந்த யாத்திரையை ஏற்பாடு செய்திருந்த ஸ்வாமிகள் மூலம் , அங்கிருந்து ஒரு பேருந்தில் பயனித்து சுமார் 80 கிலோ மீடடர் தொலைவில் உள்ள பண்டரிபூர் என்னும் ஊருக்கு சென்றோம், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கஜானன் மஹாராஜ் தர்மசாலா என்ற இடத்தில் தங்கினோம். காலையில் தீர்த்தாமாடிவிட்டு அங்கிருந்து ஒரு புராதன ஸ்தலமான விட்டல பாண்டுரங்கன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ.பாண்டுரங்கன் திருக்கோயிலுக்குச் சென்று , ஸ்ரீ.பாண்டுரங்கனை ஸேவித்தோம். திருமலையில் கூடும் கூட்டம் போல் பெருமளவில் பக்தர்கள் குழுமியிருந்தனர். பெருமாளை ஸேவித்துவிட்டு வருவதற்கு சுமார் மூன்று மணி நேரம் ஆனது.

மாலை அங்கு ஸ்ரீ.பாண்டுரங்கனின் மீது அபாரபக்தி கொண்டு அவரை நித்தம் ஸேவித்து வந்த சக்குபாய் என்னும் ஒரு பெண்மணிக்கு , அவர் செய்யாத தவறுக்காக , அரசு அவரை தண்டிக்க , அப்பொழுது எம்பெருமான் மீது கோபம் கொண்டு அந்த பெண்மணி , இனி பெருமாளை ஸேவிக்க மாட்டேன் என்று கூற, அப்பொழுது அவருக்கு காட்சியளித்த எம்பெருமான், சக்குபாயின் பக்தியினை வெளி உலகுக்குக் காட்டவே இப்படி நடக்கவைத்ததாகக் கூறி, அந்த ஊர் அரசனிடம், சக்குபாய் பற்றி நல்லவிதமாக எடுத்துச் சொல்லி அவரின் பக்தியை மெச்சி தன் திருவடிக்கீழ் சக்குபாயை சேர்த்துக் கொண்டார்.

சக்குபாய் தினசரி வெண்ணைகடைந்து , அந்த வெண்ணையினை ஸ்ரீ.பாண்டுரங்கனுக்கு நைவேத்தியம் செய்வாராம். அந்த வெண்ணை கடையும் உரல் ஒன்று சக்குபாய் சரணமடைந்த கோயிலுக்கு வெளியில் உள்ளது. அந்த உரலில் வெண்ணை கடைவது போல் உரலை ஆட்ட அங்கு வரும் பக்தர்கர் அனுமதிக்கப்படுகிறார்கள். அடியோங்களும், அடியோங்ககளுடன் இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் வெண்ணை கடைவது போல் உரலை அசைத்து மகிழ்ச்சி கொண்டோம்.




பஞ்சத்துவாரகை யாத்திரையின் இரண்டாம் கட்ட பதிவு.


24.02.2017 அன்று சென்னையிலிருந்து கிளம்பி, 25  ஆம் தேதி  பண்டரிபுரத்தில் ஸ்ரீ.பாண்டுரங்கனை ஸேவித்த பிறகு, 26 ஆம் தேதி காலை அமாவாசை தர்ப்பணத்தை முடித்துவிட்டு, மதியம் உணவு அருந்திவிட்டு ,அங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு நாசிக் நகரத்திற்கு அருகிலுள்ள பஞ்சவடி திவ்ய ஸ்தலத்திற்கு  26 ஆம் தேதி இரவு வந்தடைந்தோம்,.


மறுநாள் ( 27.02.2017 ) அன்று காலை புண்ணிய நதியான கோதாவரி நதியில் யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் தீர்த்தாமாடினோம்.  காலை உணவு அருந்திவிட்டு பின் பஞ்சத்துவாரகையில் பல இடங்களுக்கு சென்று சேவித்தோம். அது பற்றி :-


இந்த பஞ்சத்துவாரகை யாத்திரையின் பல பகுதிகள் பகவான் ஸ்ரீ.கிருஷ்ணர் வாழ்ந்து அருளிய பகுதிகள் என்ற நிலையில், இந்த பஞ்சவடி பகவான் ஸ்ரீ.ராமர் , ஸ்ரீ.சீதையுடனும், ஸ்ரீ.லக்ஷ்மணனுடனும் , தனது 14 ஆண்டு வனவாசத்தை கழிப்பதற்காக வந்து சேர்ந்த இடம்தான் இந்த பஞ்சவடியாகும்.


மராட்டிய மாநிலத்தின் மிக புண்ணிய பூமியாகக் கருதப்படும் இந்த பஞ்சவடியில்தான், ஸ்ரீ.ராமர் , ஒரு ஐந்து ஆலமரங்களுக்கு இடையில், தங்குவதற்கு ஒரு இடம் ஏற்படுத்திக் கொண்டு தங்கினார். இங்கு மாரிசன் முதல்முதலாக மானாக உருவெடுத்து வந்தான். அந்த மானை , ஸ்ரீ.சீதாபிராட்டியின் விருப்பத்திற்கேற்ப, ஸ்ரீ.ராமர் வேட்டையாடச் சென்றார், இன்றும் அந்த ஐந்து ஆலமரங்களை நாம் காணலாம்.



சூர்ப்பனகை வருகையின் போது ஸ்ரீ.லக்ஷ்மணனால் மூக்கறுப்பட்ட இடமும் இங்குதான்.


மானை வேட்டையாடச் சென்ற ஸ்ரீ.ராமர் திரும்பிவருவதற்கு மிகுந்த நேரமானதால், அவரைத் தேடி ஸ்ரீ.லக்ஷ்மணன், ஸ்ரீ.சீதையை குடிலில் தனியாக இருக்க வேண்டிய காரணத்தினால், லக்ஷ்மண் கோடுகளை இட்டு, ஸ்ரீ.சீதாதேவியை ஒரு குகையில் இருக்கச் செய்து அதைத் தாண்டி, அவர் வெளியில் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஸ்ரீ.ராமரைத் தேடி புறப்பட்டு சென்றார். அப்பொழுது இராவணன் அங்கு வந்து ஸ்ரீ.சீதா தேவியிடம் பிட்சை எடுப்பது போல் நாடகமாடினான். இராவணனுக்கு பிட்சை இட , ஸ்ரீ.லக்ஷ்மணன் இட்ட கோட்டை தாண்டி வெளியில் வர ,  அவரை கவர்ந்து சென்றான்.



இங்குள்ள ஸ்ரீ.லக்ஷ்மி நாராயணன் ( வெள்ளை ராமர் ), திருக்கோயிலிலிருந்துதான்,  உலகப் பிரச்சிதி பெற்ற கும்பமேளா தொடக்கம் நடக்குமாம்.



பஞ்சவடியின் ஒரு பகுதியில் மிக புண்ணிய நதிகளான கபில நதியும், கோதாவரி நதியும் சங்கமமாகின்றன.


யாத்திரையில் கலந்து கொண்ட , அடியோங்கள் அனைவரும் பஞ்சவடியில் சேவித்த சில முக்கியமான இடங்கள் பற்றி :-


ஸ்ரீ.சீதா தேவி வாசம் செய்த , தளிகை செய்த ஒரு குகை.


ஸ்ரீ.ராமாயண காலத்தில் இருந்த அதே ஐந்து ஆலமரங்கள்.


ஸ்ரீ.சீதாப்பிராட்டியை பிரிந்த காரணத்தினால், மிகவும் வெள்ளையாக இருந்த ஸ்ரீ.ராமர் , கருப்புராமனாக மாறிவிட்ட இடம்.


ஸ்ரீ.ஆஞ்சநேயர் ஸன்னதி.


இராவணன் பிட்சை கேட்கும் இடம் மற்றும் அவன் ஏறி வந்த புஷ்பகரக விமானம்.


ஸ்ரீ.லக்ஷ்மணனால், சூர்ப்பனகை  மூக்கறுப்பட்ட இடம்.


ஸ்ரீ.ராமரும், ஸ்ரீ.சீதாபிராட்டியும் சேர்ந்திருந்த இடமான பரணக்குடி ஸ்ரீ.அகஸ்தியர் திருக்கோயில்.


கபில நதியும், கோதாவரி நதியும் சங்கமிக்கும் இடம்.



பஞ்சத்துவாரகை யாத்திரையின் மூன்றாம் கட்ட பதிவு.


27.02.2017 அன்று மதியம் நாசிக்கிலிருந்து பேருந்தில் புறப்பட்டு , மாலை சுமார் 5.00 மணியளவில் மும்பை நகரம் வந்தடைந்து , அங்குள்ள மஹாலக்ஷ்மி திருக்கோயிலில் மஹாலக்ஷ்மி தாயாரை ஸேவித்துக் கொண்டு, பின் மும்பை மத்திய ரயில் நிலையம் வந்தோம் . அங்கே இரவு உணவை முடித்துக் கொண்டு, இரவு 11.50 மணி , வதோதரா விரைவு ரயிலில் புறப்பட்டு, மறுநாள் காலை வதோதரா ( பரோடா ) நகரம் வந்து சேர்ந்தோம். அங்குள்ள ஸ்ரீ.சாந்ராம் கோயிலை சார்ந்த ஒரு இடத்தில் தங்கினோம்.


இங்குதான் இந்த யாத்திரையின் முக்கிய ஸ்தலங்களான பஞ்சத்துவாரகையில் , அடியோங்கள் ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்ற முதல் துவாரகையான தாகூர் துவாரகா உள்ளது.


தாகூர் துவாரகா திருக்கோயிலுக்குள் கைத்தொலைபேசியோ அல்லது புகைப்படக் கருவியோ எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத காரணத்தினால் , திருக்கோயிலின் உள் பகுதியில் புகைப்படம் எடுக்க இயலவில்லை. மிக அருமையான வேலைப்பாடுகள் அமைந்துள்ள இந்த தாகூர் துவாரகை திருக்கோயிலின் உள் கட்டமைப்பு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் ப்ட்டுள்ளது. இங்கு எம்பெருமானை ஸேவித்த பிறகு இத்திருக்கோயிலை , புகைப்படம் எடுத்தால் இங்கு இதுவரை வர இயலாதவர்களுக்கும், வயதான மூப்பின் காரணமாக இனி வர முடியாமல் இருப்பவர்களுக்கும் முகநூலில் பதிவு செய்து அதன் வழியாக இத்திருக்கோயிலை ஸேவித்து, களிக்கும் பாக்கியம் கிடைக்குமே என்று மனம் ஏங்கியது. என்ன செய்வது. இத்திருக்கோயிலின் சட்டங்களுக்கு உட்பட்டுத்தானே நாம் நடந்து கொள்ள வேண்டும்?


இத்திருக்கோயிலுக்கு வெளியில் எடுத்த சில புகைப்படங்களையும், வேறு சில கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட சில இடங்களில் எடுத்த புகைப்படங்களையும் அடியேன் முக நூலில் பதிவு செய்கிறேன்.

இந்த தாகூர் துவாரகாவில் எம்பெருமான் ஸ்ரீ.கிருஷ்ணர் கோயிலைத் தவிர
சரஸ்வதி தேவி, தத்ராத்ரேயர் , ருக்மணி தேவி திருக்கோயில்கள் உள்ளன.


இங்கு ஓடும் கோமதி சாகர் நதி மிகவும் புண்ணியம் வாய்ந்த நதியாகும்.

மேற்படி ஸ்தலங்களை ஸேவித்துக் கொண்டு அன்று மாலை பேருந்தில் புறப்பட்டு, பஞ்சத்துவாரகையின் , ஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட மிக முக்கிய ஸ்தலமான துவாரகீஸ் திருக்கோயில் அமைந்துள்ள துவாரகாவை நோக்கி சென்றோம்.





பஞ்சத்துவாரகை யாத்திரையின் நான்காம் கட்ட பதிவு.- கோமதி துவாரகா எனப்படும் துவாரகீஸ் திவ்யதேஸத்தைப் பற்றிய சில குறிப்புகள் :-


28.02.2017 அன்று மாலை தாகூர் துவாரகையிலிருந்து பேருந்தில் புறப்பட்டு, அடுத்த முக்கிய திவ்ய தேஸமான கோமதி துவாரகை என்றும் அழைக்கப்பெரும் துவாரகீஸ் ஸ்தலஸ்தை மறுநாள் விடியற்காலை வந்தடைந்தோம்.

ஐந்து துவாரகைகளில் மிகவும் முக்கியமான இந்த கோமதி துவாரகை எம்பெருமானைத்தான் ஆழ்வார்கள் மங்களாஸாஸனம் செய்துள்ளதாக அடியோங்களிடம் , இந்த யாத்திரையை நடத்திய ஸ்வாமி அவர்கள் கூறினார்கள்.


ஸ்ரீ.நம்மாழ்வார் ஒரு பாசுரத்திலும், ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்திலும், ஸ்ரீ.பெரியாழ்வார் ஐந்து பாசுரங்களிலும், சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஸ்ரீ.ஆண்டாள் நான் கு பாசுரங்களிலும், ஆழ்வார்களில் கடை ஆழ்வாரான ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களிலும், ஆக ஐந்து ஆழ்வார்கள் மொத்தம் பதிமூன்று பாசுரங்களில் துவாரகாதிபதியான ஸ்ரீ.கிருஷ்ணனை மங்களாஸாஸனம் செய்துள்ளார்கள்.


ஸ்ரீ.நம்மாழ்வார்,

" அன்னை என் செய்யில் என்? * ஊர் என் சொல்லில் என் தோழிமீர் *ஏன்னை இனி உமக்காசை இல்லை * அகப்பட்டேன் * முன்னை அமரர் முதல்வன் * வண்துவராபதி மன்னன் * மணிவண்ணன் * வாசுதேவன் வலையுளே "

ஏன்று திருவாய்மொழியின் எட்டாம் பத்தின் மூன்றாம் திருமொழியின் இரண்டாம் பாசுரத்திலும்,

ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார்,

" சேயன் அணியன் * சிறியன் மிகப் பெரியன் * ஆயன் துவரைக்கோனாய் நின்ற மாயன் * அன்று ஓதிய வாக்கதனை கல்லார் * உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞனாமில் *

என்று நான்முகன் திருவந்தாதியின் எழுபத்து ஒன்றாம் பாசுரத்திலும் துவாரகை மன்னனை குறிப்பிடுகிறார்கள்.


இந்த கோமதி துவாரகையைத் தான் துவாரகா என்றும் ஊர் பேர் சொல்லி அழைக்கிறார்கள். விடியற்காலை இங்கு வந்தவுடன், இங்குள்ள அதிதிபவன் என்ற இடத்தில் தங்கினோம்.


இந்த துவாரகைக்கு கோமதி துவாரகா என்று பெயர் ஏற்படுவதற்குக் காரணம் மிக புண்ணிய நதிகளில் ஒன்றான கோமதி நதி  நீண்ட தூரம் பயனித்து , அரபிக் கடலில் இங்குதான் சங்கமமாகின்றது. திருக்கோயிலை ஒட்டியே இந்த நதி ஓடி , கடலில் கலக்கிறது. ஒரு அற்புதமான திவ்ய தேஸத்தை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டோம்.


காலையில் தங்கியிருந்த அதிதி பவனில் காப்பி  அருந்திவிட்டு, கோமதி நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் தீர்த்தாமாடினோம். பின் அங்கேயே உடைகளை மாற்றிக் கொண்டு திருக்கோயிலுக்குச் சென்று எம்ம்பெருமானை ஸேவித்தோம், இங்கு ஆற்றை ஒட்டிய பகுதியில் உள்ள கடைகளில், எப்படி முக்திநாத்தின் சாளக்கிராமங்கள் கிடைக்கின்றனவோ , அதுபோல் இங்கும் சாளக்கிராமங்கள் கிடைக்கின்றன. முக்திநாத் சாளக்கிராமங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும்.. இங்கு கிடைக்கும் சாளக்கிராமங்கள் வெள்ளை நிறத்தில் உள்ளன. அவைகளை மஹாலக்ஷ்மியாக இருக்கின்றன என்கிறார்கள்.


திருகோயிலுக்குள் எம்பெருமான் ஸ்ரீ.கிருஷ்ணன் ஸன்னதிக்குள் , ஒரு அகண்ட பாத்திரத்தில் ஸ்ரீ.கண்ணனின் திருவடியான, திருப்பாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ.கண்ணனின் திருவடியையும் தனியாக ஸேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஸன்னதியில் பெருமாளுக்கு முன் உள்ள அந்த அகண்ட பாத்திரத்தையும் புகைப்படம் எடுத்துள்ளேன்.



இந்த கோமதி துவாரகையில் , காலையும் , மாலையும் சேர்த்து ,மூன்று முறை  ஸேவிக்கும்  பாக்கியம் கிடைக்கப்பெற்றோம். அதுவும் எம்பெருமான் அருளால் ,இரண்டு முறை மங்கள ஹாரத்தி நடைபெரும் போது ஸேவிக்கும் அற்புத பாக்கியம் கிடைக்கப் பெற்றோம்.இந்தத் திருக்கோயிலில் ஸ்ரீ.தேவகிமாதா, ஸ்ரீ.ருக்மினி பிராட்டியார், ஸ்ரீ.மீரா, ஸ்ரீ.சத்யபாமா, ஸ்ரீ.ராதிகாதேவி, ஸ்ரீ.ஜாம்பவதி தேவி, ஸ்ரீ.பலராமர், ஸ்ரீ.பரத்யும்னன், ஸ்ரீ. அனிருத்தன் எழுந்தருளியிருக்கிறார்கள். மேலும் இங்கு ஸ்ரீ.ராமபிரானுக்கும் ஒரு திருக்கோயில் உள்ளது.


பஞ்சதுவாரகையில் முக்கிய ஸ்தலமான இந்த திவ்யதேஸத்தை ஸேவித்துக் கொண்டு , பின் அங்கிருந்து சுமார் ஒன்று இரண்டு மணி பேருந்து பயன தூரத்தில் , கடலுக்குள் உள்ள பேட் துவாரகை சென்றோம்.





பஞ்சத்துவாரகை யாத்திரையின் ஐந்தாம் கட்டப் பதிவு :-



கோமதி துவாரகை எம்பெருமானை ஸேவித்துக் கொண்டு பகல் இரண்டு மணியளவில் , அங்கிருந்து புறப்பட்டு, அரபிக் கடலுக்குள் சுமார் ஒரு அரைமணி நேர படகு பயனத்திற்குப் பிறகு பேட் துவாரகை சென்றடைந்தோம். இங்கும் திருக்கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லாத காரணத்தினால் , படகில் சென்ற பொழுதும், பேட் துவாரகை திருக்கோயிலுக்குச் செல்லும் வழியிலும் சில புகைப்படங்கள் எடுத்தேன்.


படகில் திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் , எம்பெருமானை ஸேவிக்கும் முன்பு கண்ணுக்கும், மனதுக்கும் ரம்மியமான வகையில் சில காட்சிகளைக் கண்டோம்.  அடியோங்கள் பேட் துவாரகைக்கு கிளம்பும் முன் யாத்திரையின் நிர்வாகஸ்தர் அடியோங்களிடம் , கடலில் படகில் செல்லும் பொழுது அங்கு பறவைகள் கூட்டம் மொய்க்கும் என்றும், ஆகையால் அவற்றுக்கு பிஸ்கட் நிறைய வாங்கி சென்று , வானத்தின் மீது எறியும் பொழுது, கூட்டம் கூட்டமாக பறவைகள் , எறியும் பிஸ்கட்களை கீழே விழாமல் பறந்து கொண்டே, தங்கள் வாயில் கவ்விக் கொள்ளும் என்று சொன்னார். யாத்ரீகர்கள் அனைவரும் பிஸ்கட்களை வாங்கிச் சென்று படகில் உட்கார்ந்து கொண்டே வானத்தை நோக்கி வீசினோம். என்ன அழகு. ஒவ்வொரு பறவையும் அப்படி வீசின பிஸ்களை பறந்து கொண்டே வாயில் கவ்விக் கொண்டு சென்றன. ஒரு சில பிஸ்கட்கள் மட்டுமே கீழே விழுந்தன. அதற்கும் காரணம் அந்த பிஸ்கட்களை பிடிக்க முயலும் பறவைகளின் போட்டிகளே. அந்தக் காட்சியானது மிகவும் அழகாக இருந்தது.


அது போல் பேட் துவாரகையில் பகவான் ஸ்ரீ.கிருஷ்ணரை ஸேவித்துவிட்டு, மீண்டும் படகுக்குத் திரும்பும் போது, மாலை நேரம் ஆனபடியால் , சூரியன் மறையும் காட்சி மிக அற்புதமாக இருந்தது. அதுவும் கடலிலிருந்து பார்க்கும் போது சூரியன் சிறிது சிறிதாக கீழே இறங்கிக் கொண்டே வானத்திலிருந்து  மறையும் காட்சியை பார்க்கும் பொழுது மிக ஆனந்தமாக இருந்தது.

மீண்டும் இரவு கோமதி துவாரகாவிற்கு வந்து மேலும் ஒரு முறை திருக்கோவிலுக்குச் சென்று பெருமாளை நன்கு ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றோம்.


மறுநாள் விடியற்காலை கோமதி துவாரகாவிலிருந்து புறப்பட்டு , பேருந்தில் புறப்பட்டு, சுதாமா திருக்கோயில், ஸ்ரீ.கிருஷ்ண ப்ரபாச தீர்த்தம் மற்றும் பல இடங்களுக்குச் சென்றோம். அதனைப் பற்றி விரைவில் பதிவிடுகின்றேன்.





. துர்வாச முனிவரும், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சில  நிபந்தனை விதிக்கிறார்.  அவரை ஒரு


பஞ்சத்துவாரகை யாத்திரையின் ஆறாம் கட்டப் பதிவு :-


பேட் துவாரகை பற்றி முன்பே பதிவிட்டிருந்தேன். அந்த பேட் துவாரகையின் சில சிறப்புகள் :-


பகவான் ஸ்ரீ.க்ருஷ்ணரும், ஸ்ரீ.ருக்மணி தேவியும், துர்வாச முனிவரை தங்கள் திருமாளிகைக்கு சாப்பிட அழைத்தனர். அவர்களுடன் வருவதற்கு ஒப்புக்கொண்ட துர்வாச முனிவர் சில நிபந்தனைகளை விதிக்கிறார். அவரை ஒரு ரதத்தில் அமர வைத்து ஸ்ரீ.க்ருஷ்ணரும், ஸ்ரீ.ருக்மணிதேவியும் அந்த ரதத்தை இழுத்துச் செல்ல வேண்டும் என்றும் , வழியில் எங்கும் நிற்கக் கூடாது என்றும் கூறுகிறார். அவரின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, ரதத்தை இழுத்துச் செல்கின்றனர்.


வழியில் ஸ்ரீ.ருக்மணிதேவிக்கு தீர்த்த தாகம் எடுக்க, வழியில் எங்கும் தீர்த்தம் கிடைக்கவில்லை.  அதனால் பகவான் ஸ்ரீ.கிருஷ்ணர் , தம் கால் கட்டை விரல் மூலம் பூமியை அழுத்தி, பூமியிலிருந்து நீர் வரவழைக்கிறார். ஸ்ரீ.ருக்மணிதேவி, ரதத்தை சற்று நிறுத்தி, தாகத்தை தீர்த்துக் கொள்ள நீர் அருந்துகிறார். இதனால் கோபமுற்ற துர்வாச முனிவர் ஸ்ரீ.க்ருஷ்ணரும், ஸ்ரீ,ருக்மணிதேவியும் 12 ஆண்டுகள் பிரிந்து வாழ வேண்டுமென்று சாபம் இடுகிறார்.



துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து விடுபட என்ன செய்வது என்று யோசித்து, அவரை திருப்த்தி படுத்தும் வண்ணம் அவருக்கு பழங்களைக் கொடுத்து, பணிவிடைகள் செய்து நன் கு உபசரிக்கிறார், ருக்மணிதேவி . அதனால்  மனம் குளிர்ந்த  துர்வாசர் தாம் இட்ட சாபத்தை நீக்குகிறார். பின் ஸ்ரீ.க்ருஷ்ணரும், ஸ்ரீ.ருக்மணிதேவியும் சேர்ந்து வாழ்கிறார்கள்.


இந்த பேட்துவாரகையில்தான் ஸ்ரீ.ருக்மணிதேவி, ஸ்ரீ.க்ருஷ்ணரின் சிலா ரூபத்தை , தானே ப்ரதிஷ்டை  செய்கிறார்.  இந்த பேட் துவாரகையில்தான் பகவான் ஸ்ரீ.க்ருஷ்ணரிடம் அபார பக்தி கொண்டிருந்த ,பக்தமீரா தானே அங்கு வந்து ஸ்ரீ.க்ருஷ்ணரிடம் அடைக்கலமாகிறார். இந்த பேட் துவாரகையில்தான் குசேலர் , ஸ்ரீ.க்ருஷ்ணருக்கு அவல் கொடுக்கிறார். சத்யபாமா தினமும் இங்கு க்ருஷ்ணருக்கு மங்கள ஹாரத்தி எடுப்பாராம்.


இந்த பேட் துவாரகை யாத்திரையை முடித்துக் கொண்டு அடுத்த நாள் (02.03.2017) அன்று காலை சுதாமா கோயிலுக்குச் சென்றோம். அந்த சுதாம கோயிலில் எடுத்த சில புகைப்படங்களை இங்கு பதிவிடுகிறேன்.


இங்கு அருகிலுள்ள சோம்நாத் திருக்கோயிலுக்கும் யாத்திரை நிர்வாகஸ்தர் பலரை அழைதுதுச் சென்றார். அங்கு வெளியில் எடுத்த படங்களையும் இத்துடன் பதிவிடுகின்றேன்.




பஞ்சத்துவாரகை யாத்திரையின் ஏழாம் கட்டப் பதிவு - ப்ரபாச தீர்த்தம் :-



பஞ்சத் துவாரகை யாத்திரயில் , தாகுர் துவாரகா, கோமதி ( த்வாரகீஸ் ) துவாரகா, பேட் துவாரகா மற்றும் பண்டரிபூர், பஞ்சவடி போன்ற புண்ணிய ஸ்தலங்களைப் பற்றியும் முன்பே பதிவிட்டிருந்தேன்.


பஞ்சத் துவாரகையின் அடுத்து ஸேவித்த இரண்டு துவாரகைகளான ஸ்ரீநாத் துவாரகா மற்றும் கங்க்ரோலி துவாரகாவுடன் , இடையில் ஸேவித்த ஸ்ரீக்ருஷ்ண ப்ரபாச தீர்த்தம் மற்றும்  குஜாராத்தில் அமைந்துள்ள சில திருக்கோயில்கள் பற்றியும்  ஒவ்வொன்றாக மேற் கொண்டு பதிவிடுகிறேன்.



அந்த ப்ராபச தீர்த்தம் பற்றி :-



பகவான் ஸ்ரீ.கிருஷ்ணர் பிறந்து வாழ்ந்து பல சாதனைகள் புரிந்த மதுரா, விருந்தாவனம், கோகுலம், கோவர்த்தனம்  பற்றி பலருக்கும் நன்கு தெரிந்திருக்கும். மேலும் இந்த திருத்தலங்களைப் பற்றி கடந்த ஆண்டு புகைப்படங்கள் அடியேன் பதிவிட்டிருந்தேன்.



இந்த பஞ்சத் துவாரகை யாத்திரையின் போது, அடியோங்கள் சென்று ஸேவித்த இடங்களில் ஒன்று க்ருஷ்ண ப்ரபாச தீர்த்தம் என்ற ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இது பஞ்சத் துவாரகையில் ஒன்றாக இல்லையென்றாலும் , முக்தி துவாரகா  என்று அழைக்கப்படுகிறது.



இந்த ப்ரபாச தீர்த்தத்தில் தான் பகவான் ஸ்ரீ.க்ருஷ்ணர் பரமபதம் எழுந்தருளினார். அவருக்கு ஈமக் கிரியைகள் செய்யப்பட்ட இடமும், அவரின் திருப்பாதம் படிந்த இடமும் இன்றும் இந்த இடத்தில் இருக்கிறது. ஸ்ரீ.க்ருஷ்ணர் இங்கு வந்ததற்குக் காரணம், தனது தமையானார் ஸ்ரீ.பலராமர் இங்கு வந்து பரமபதம் அடைந்த இடத்தை காணத்தான். 


ஸ்ரீ.க்ருஷ்ணர் பரமபதிப்பதற்கு முன்பே இங்கு எழுந்தருளியிருந்த ஸ்ரீ.பலராமர், ஆதிசேஷன் ரூபமாகி அங்கிருந்த ஒரு சிறிய குகையில் உள்ள த்வாரம் வழியாக பூமிக்குள் மறைந்து பரமபதம் எழுந்தருளினார்.


ஸ்ரீ.க்ருஷ்ணர் பரமபதித்த இந்த இடத்தில் தான் ஹிரண்ய நதி ,  கபில நதி  மற்றும் சரஸ்வதி நதி ஆகியவை சங்கமமாகி, இதுவும் ஒரு  " திருவேணி சங்கமம் " என்று அழைக்கப்படுகிறது.



அடுத்த பதிவில் ஸ்ரீ.க்ருஷ்ணர் பரமபதிப்பதற்கு காரணமாயிருந்த இடத்தின் புகைப்படங்களையும் , அதைப்பற்றிய ஒரு சிறிய செய்தியினையும் பதிவிடுகிறேன்.



பஞ்சத்துவாரகை யாத்திரையின் எட்டாம் கட்டப் பதிவு :-



பகவான் ஸ்ரீ.க்ருஷ்ணரின் சகோதரர் ஸ்ரீ.பலராமர் பரமதித்த இடமான ப்ரபாச தீர்த்த இடத்திற்கு . ஸ்ரீ.க்ருஷ்ணர் வந்து , ஒரு மரத்தின் பக்கத்தில் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார். அவர் ஒரு காலை மடக்கி கொண்டு அமர்ந்த நிலையில் இருந்தார்.



அப்பொழுது அந்த பக்கமாக வந்த ஜாரா என்ற வேடன் ஒருவன், அந்த மரத்தின் பக்கம் வந்த பொழுது , ஸ்ரீ.க்ருஷ்ணரின் திருப்பாதம் அவனுக்கு ஒரு மான் போல் தெரிந்ததாம். அதனால் அதனை வேட்டையாட ஒரு அம்பை எய்தானாம். அந்த அம்பு பட்டு, பகவான் ஸ்ரீ.க்ருஷ்ணர் பரமபதித்து வைகுண்டம் எழுந்தருளினாராம்.



அந்த ஜாரா என்கிற வேடன் யார் என்றால் , முற்பிறவியில் இராமாயண காலத்தில் வாலியாக வாழ்ந்தவனாம்.  அப்பொழுது ஸ்ரீ.ராமர் தனது எதிரியாக இல்லாத நிலையிலும் , மறைந்திருந்து அம்பை எய்து, வாலியை கொன்ற காரணத்தினால் , ஸ்ரீ. ராமர் மனம் நொந்து விட்டாராம்.



அதனால் அவரின் அடுத்த அவதாரமான  ஸ்ரீ.க்ருஷ்ணாவதாரத்தில் , தன் முந்தைய அவதாரத்தில் தான் செய்த தவறை சரி செய்யவும், தன்னை பழி தீர்த்துக் கொள்ளும் விதமாகவும் வாலியாகிய ஜாராவின் அம்பினால் தான் பரமபதிக்க வழி வகை செய்து கொடுத்து, மேலும் மஹாபாரத யுத்தத்தில் துரியோதனாதிகளை கொல்ல , பஞ்ச பாண்டவர்களுக்கு துணை நின்ற காரணத்தினால் துரியோதனாதிகளின் தாயாரான காந்தாரியின் சாபத்தை நிறைவேற்ற அந்த ஜாராவை வரவழைத்தாராம்.






ஏன் காந்தாரியின் சாபத்தை ஸ்ரீக்ருஷ்ணர் ஏற்றுக் கொண்டார் என்றால், அவள் மஹாவிஷ்ணுவின் மீது அபார பத்தி கொண்டவளாம். அதனால் தான் அவளின் சாபத்தை ஏற்று , ஜாராவின் மூலம் அம்பெய்த வைத்து, தன் க்ருஷ்ணாவதாரத்தை முடித்துக் கொண்டாராம்.




பஞ்சத்துவாரகை யாத்திரையின் ஒன்பதாம் கட்டப் பதிவு : -



பஞ்சத்துவாரகை யாத்திரையின் முடிவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஜ்மிர் நகரத்தில் உள்ள புஷ்கரை ஸேவிக்கச் சென்றோம்.


புஷ்கரில் என்ன விசேஷம் ?


எம்பெருமான் ஸ்ரீமந்.நாராயணன் ஸ்வயம்புவாய் எழுந்தருளிய ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்கள் மொத்தம் எட்டு. அவற்றி நான்கு தென் பாரதத்திலும், மற்றும் ஒரு நான்கு வட பாரதத்திலும் உள்ளது. இந்த எட்டு ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்களில் , தென் பாரதத்தில் மூன்றும், வட பாரதத்தில் மூன்றும் ஆழ்வார்களாள் மங்களா ஸாஸனம் அருளப்பட்ட திவ்ய தேஸங்களாகும். மீதமுள்ள இரண்டும் திவ்ய ஸ்தலங்களாகும் அவை தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீமுஷ்ணமும், ராஜஸ்தானில் உள்ள புஷ்கரும் ஆகும்.


தென் பாரதத்தில் உள்ள ஸ்வயம்வக்த  க்ஷேத்திரங்கள் :-



ஸ்ரீ.ரங்கநாதர் பள்ளிகொண்டு ஸேவை ஸாதிக்கும்  ஸ்ரீரங்கம் .



ஸ்ரீ.வெங்கடேசர் நின்ற வண்ணம் ஸேவை ஸாதிக்கும் திருமலை.



ஸ்ரீ.தெய்வநாயகன் தரிசனம் அருளும் வானமாமலை.



ஸ்ரீ.பூவராஹப் பெருமாள் ஸேவை ஸாதிக்கும் ஸ்ரீமுஷ்ணம்.



மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் முதல் மூன்றும் ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் செய்யப்பெற்ற திவ்ய தேஸங்கள் ஆகும். ஸ்ரீ.முஷ்ணம் ஒரு புராண திவ்ய ஸ்தலமாகும்.



வட பாரதத்தில் உள்ள ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்கள் :-



ஸ்ரீ.பத்ரிநாராயணன் ஸேவை ஸாதிக்கும் ஸ்ரீபத்ரி.



ஸ்ரீ.சாளக்கிராமர் ஸேவை ஸாதிக்கும் முக்திநாத்.



ஸ்ரீ.வனராஜனாக ஸேவை ஸாதிக்கும் நைமிச்சாரண்யம் .



ஸ்ரீ.புஷ்கரணியாக ஸேவை ஸாதிக்கும் புஷ்கர்.



இதிலும் மேலே குறிப்பிடுள்ளவற்றில் முதல் மூன்றும் ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் செய்யப் பெற்றதாகும். ஸ்ரீ.புஷ்கர் ஒரு புராண திவ்ய ஸ்தலமாகும்.




புஷ்கரில் உள்ள புஷ்கரணியில் நீராக பெருமாள் தோன்றிய ஸ்வயம்வக்த க்ஷேத்திரம் .


இந்த புஷ்கருக்கு , புஷ்கரம் என்று பெயர்வரக் காரணம் , ஒரு சமயம் பிரம்மா ,  யாகம் செய்ய வேண்டி ஒரு இடத்தை தேடிக் கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் அவரின் கையில் இருந்த தாமரை கீழே விழுந்ததாம் . பிரம்மாவுக்கு அந்த இடம்தான் யாகம் செய்வதற்கு ஏற்ற இடம் என்ற எண்ணம் ஏற்பட, தாமரை என்பதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் புஷ்கர் என்ற பெயர் காரணமாக அந்த இடம் புஷ்கர் என்று அழைக்கப்பட்டதாம்.



இங்கு தான் எம்பெருமான் ஸ்ரீ.மஹாவிஷ்ணு, நீர் நிலையாக தானே அவதரித்தார். எம்பெருமான் எழுந்தருளியுள்ள இந்த நீர் நிலை மிகவும் புண்ணியம் வாய்ந்தது. இந்த புஷ்கரணியிலே தீர்த்தாமாடுவது, பத்தர்களுக்கெல்லாம் மிகவும் பாக்கியமான ஒன்றாகும். இந்த புஷ்கரணியிலே 52 படித்துறைகள் உள்ளனவாம். ஆனால் அடியோங்கள் இரண்டு படித்துறை வழியாக மட்டுமே இங்கு சென்று , ஒரு படித்துறையில் தீர்த்தாமாடியும். மற்றொன்றை தரிசித்தும் வந்தோம். சாதாரண நாள்களில் ஆயிரக் கணக்கில் வரும் பத்தர்கள் , புஷ்கரின் பௌர்ணமி அன்று மிக மிக அதிக அளவில் வந்து தீர்த்தாமாடுவார்களாம்.


























இந்த புஷ்கரிலே பல திருக்கோயில்கள் உள்ளன.  நேரமின்மை காரணமாகவும், அடியோங்களுக்கு இருந்த அவகாசம் மிகக் குறைந்த அளவே இருந்த காரணத்தாலும் சில திருக்கோயில்களை மட்டுமே ஸேவிக்க முடிந்தது.



ப்ரம்மா , பூவுலகில் வந்து யாகம் செய்த இடம் இது என்பதால் ,உலகிலேயே ப்ரம்மாவிற்கு தனிக் கோயில் உள்ள முக்கியமான ஒரே இடம் இந்த புஷ்கர்தான். இங்குதான் ப்ரம்மா திருக்கோயிலின் , ப்ரம்மவின் பத்தினி சாவித்திரி தேவியும் காட்சி கொடுக்கிறார். இதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. அதாவது, யாகம் செய்ய ப்ரம்மா தயாராக இருந்த நிலையில், அவரது பத்தினியான ஸ்ரீ.சாவித்திரி தேவி அங்கு வருவதற்கு இயலவில்லையாம். அதனால் உடனே யாகம் நடத்த விரும்பிய ப்ரம்மா அங்குள்ள வேறு ஒரு பெண்மணியாகிய காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டு, யாகத்தை நடத்தி முடித்தாராம். அதனால் ப்ரம்மா மீது கோபம் கொண்ட சாவித்திரி, ப்ரம்மாவை இந்த ஒரு இடத்தில்தான் பத்தர்கள் ஸேவிக்க இயலும் என்றும் , வேறு எங்கும் ஸேவிக்க இயலாது என்றும் சாபமிட்டாராம். அந்த சாபத்தினால், ப்ரம்மாவிற்கு , புராண , ஆதி காலங்களில் எங்கும் திருக்கோயில் இல்லை.  புஷ்கரில் உள்ள இந்த திருக்கோயிலில் தான் ப்ரம்மா பத்தர்களுக்கு  ஸ்ரீ.சாவித்திரியுடனும், ஸ்ரீ.காயத்ரியுடனும் சேர்ந்து காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறார்.




அடியோங்கள் ஸேவித்த திருக்கோயில்கள் , ஸ்ரீவராஹர் திருக்கோயில்,  ஸ்ரீ.வைகுந்தநாதர் திருக்கோயில் மற்றும் மேலே சொன்ன ஸ்ரீ.ப்ரம்மா திருக்கோயில் மட்டுமே.  அடியோங்கள் சென்றபொழுது, ஸ்ரீ.வைகுந்தநாதர் திருக்கோயிலில், தமிழக வழக்கப்படி,  திருவாராதணம் முடிந்து, பிரசாத வினியோகம் ஆனது. எம்பெருமான் அருளால் அங்கு ப்ரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெற்றோம்.




பஞ்சத் துவாரககளில் கடைசியாக  ஸேவித்த இரண்டு துவாரகைகளான ஸ்ரீநாத் துவாரகா மற்றும் கங்க்ரோலி துவாரகாவில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதாலும், அங்கு கேமராவையோ, கைப்பேசியை கொண்டு சென்றாலோ அதை பாதுகாப்பாக வைப்பதற்கு சரியான இடம் இல்லை என்பதால் அங்கெல்லாம் புகைப்படங்கள் அடியேனால் எடுக்க இயலவில்லை.



இனி அடுத்து புது தில்லிக்கு அருகிலுள்ள குருக்ஷேத்திரம் பற்றிய பதிவு தொடரும்.






திவ்ய தேசங்களும், ஆழ்வார் பாசுரங்களும் அவை பற்றிய விவரங்களும்..





அடியேன் ,  திவ்ய தேஸங்கள் பற்றியும், அந்த திவ்ய தேஸங்களை தங்கள் பாசுரங்கள் மூலம் எந்த எந்த ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ளார்கள் என்பது பற்றியும், எத்தனை பாசுரங்கள் என்பது பற்றியும், அந்த பாசுரங்கள் பற்றிய தகவல்களை பதிவிடுவதில் ஆர்வமுடன் ஈடுபட விரும்பினேன்.



முதல் பதிவாக பூலோக வைகுண்டமும், எம்பெருமானின் முதல் முக்கிய திவ்ய தேஸமாகிய திருவரங்கம் பற்றி அடியேன் மனதில் பதிந்தவைகளை பற்றிய பதிவு :-


"கோயில்" என்றால் அது திருவரங்கம் திவ்ய தேஸமாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் மூலவர் பெரிய பெருமாளாகிய ஸ்ரீ.ரங்கனாதர், உற்சவர் ஸ்ரீ.நம்பெருமாள் , தாயார் பெரியபிராட்டியார் ஸ்ரீ.ரங்கநாயகி தாயார் . பலபல ஆயிரம் ஆண்டுகள் முன்பு ஸ்ரீ.ராமபிரான்  , தான்  ஆராதித்த அவர்தம் குலத்ய்வமாக இருந்த ஸ்ரீ.ரங்கனாதரை, ஸ்ரீ.விபீஷ்ணனுக்கு அருளினார். விபீஷ்ணன் அயோத்தியில் இருந்து புறப்பட்டு, இலங்கை செல்லும் வழியில், ஸ்ரீ.ரங்கனாதரை ,காவிரியும். , கொள்ளிடம் நதியும் சுற்றியுள்ள ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளப் பண்ணினார். விபீஷ்ணன் மீண்டும் அவரை எழுந்தருளப் பண்ண முயற்சிக்கும் பொழுது, முடியாமல் போக, எம்பெருமான் தான் அங்கேயே வாசம் செய்ய இருப்பதாகக் கூறி விபீஷ்ணனை அனுப்பிவிட்டார்.


ஆழ்வார்கள் பன்னிருவரில் மதுரகவி ஆழ்வார் தவிர்த்து, பதினோரு அழ்வார்களால் மங்களாஸாஸன்ம் செய்யப் பெற்ற ஒரே எம்பெருமான் ஸ்ரீ.ரங்கனாதன் மட்டுமே.  நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களில் அதிகமான பாசுரங்கள்  அவருக்கு மட்டுமே. மொத்தம் 247 பாசுரங்கள். பதினோரு ஆழ்வார்களில் , திருவரங்க திவ்ய தேஸத்தை மட்டுமே அருளிச் செய்த ஆழ்வார் ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார். மற்ற ஆழ்வார்கள் சில பல திவ்ய தேஸங்களை தங்கள் பாசுரங்களில் மங்களா ஸாஸனம் செய்துள்ளார்கள்.


இனி ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ள பாசுரங்கள் பற்றிய விவரங்கள் :-


ஆழ்வார்களின் தலைவரான ஸ்ரீ.நம்மாழ்வார் அருளிச் செய்த , திருவாய்மொழியின் ஏழாம் பத்தின் இரண்டாம் திருமொழியில் 11 பாசுரங்களும், திருவிருத்தத்தில் 12 ஆம் பாசுரமாகிய ஒரு பாசுரமும் சேர்த்து மொத்தம் 12 பாசுரங்கள் அருளிச்செய்துள்ளார்.



முதலாழ்வார்களில் முதல்வரான ஸ்ரீ.பொய்கை ஆழ்வார் அருளிச்செய்த "முதல் திருவந்தாதி"யில் ஆறாம் பாசுரமான ஒரு பாசுரம்.


முதலாழ்வார்களில் இரண்டாமவரான ஸ்ரீ.பூதத்தாழ்வார் அருளிச்செய்த "இரண்டாம் திருவந்தாதி" யின், 28, 46, 70 மற்றும் 88 வது பாசுரங்களாகிய
நான்கு பாசுரங்கள்.


முதலாழ்வார்களில் மூன்றாவது ஆழ்வாரான ஸ்ரீ.பேயாழ்வார் அருளிச் செய்த "மூன்றாம் திருவந்தாதி" யின் , 61 மற்றும் 62 வது பாசுரங்களான இரண்டு பாசுரங்கள்.



பூவுலகில் 4700 ஆண்டுகள் வாழ்ந்தவரும், சில மதங்களில் இருந்து பின் ஸ்ரீ.பேயாழ்வாரால், ஸ்ரீ,வைஷ்ணவ மதத்திற்கு மாறியவருமான ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்த " திருச்சந்தவிருத்தம் " பாசுரங்களில் 21, 49, 50, 51, 52, 53, 54, 55, 93 மற்றும் 119 வது பாசுரம் , மேலும் "நான்முகன் திருவந்தாதி " யில் 3, 30, 36 மற்றும் 60 வது பாசுரம் உட்பட மொத்தம் 14 பாசுரங்கள்.



ஸ்ரீ.பெரியாழ்வார் அருளிச் செய்துள்ள " பெரியாழ்வார் திருமொழி " யின்
இரண்டாம் பத்தின் ஆறாம் திருமொழியின் இரண்டாவது மற்றும் எட்டாவது பாசுரங்கள், இரண்டாம் பத்தின் ஒன்பதாம் திருமொழியின் பதினோறாவது பாசுரம், மூன்றாம் பத்தின் மூன்றாம் திருமொழியின் இரண்டாவது பாசுரம், நான்காம் பத்தின் எட்டாம் திருமொழி தொடங்கி பத்தாம் திருமொழி முடிய , ஒவ்வொரு திருமொழியின் பத்து பாசுரங்கள் உட்பட மொத்தம் முப்பத்து ஐந்து பாசுரங்கள்.



ஸ்ரீ.ஆண்டாள் அருளிச் செய்த " நாச்சியார் திருமொழி " யின் , பதினோறாம் திருமொழியின் பத்து பாசுரங்கள்.



ஸ்ரீ.குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த " பெருமாள் திருமொழி" யில் , முதல் திருமொழி தொடங்கி மூன்றாம் திருமொழி வரை 30 பாசுரங்களும், எட்டாம் திருமொழியின் , பத்தாம் பாசுரம் உட்பட மொத்தம் 31 பாசுரங்கள்.



ஸ்ரீ.திருப்பாணாழ்வார் அருளிச் செய்துள்ள " அமலனாதிபிரான் " னின் பத்து பாசுரங்கள்.



ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்துள்ள " திருமாலை " யின் 45 பாசுரங்களும், " திருப்பள்ளியெழுச்சி " யின் பத்து பாசுரங்களும் சேர்த்து மொத்தம் 55 பாசுரங்கள். மேலே குறிப்பிட்டபடி எம்பெருமான் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேஸங்களில் , திருவரங்க திவ்ய தேஸத்தை மட்டுமே தன் பாசுரங்களில் அருளிச் செய்துள்ள ஒரே ஆழ்வார் இவர் மட்டுமே,



ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாராக அவதரித்த ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்துள்ள " பெரிய திருமொழி " யின் முதல் பத்தின் எட்டாம் திருமொழியின்   இரண்டாம் பாசுரம், மூன்றாம் பத்தின் ஏழாம் திருமொழியின் ஆறாம் பாசுரம், ஐந்தாம் பத்தின் , நான்கு, ஐந்து, ஆறு, ஏழு மற்றும் எட்டாம் திருமொழி உட்பட மொத்தம் 50 பாசுரங்கள், ஆறாம் பத்தின் ஆறாம் திருமொழியின் ஒன்பதாம் பாசுரம், ஏழாம் பத்தின் மூன்றாம் திருமொழியின் நான்காம் பாசுரம், எட்டாம் திருமொழியின் இரண்டாம் பத்தின் ஏழாம் பாசுரம், ஒன்பதாம் பத்தின் ஒன்பதாம் திருமொழியின் இரண்டாம் பாசுரம், பதினோறாம் திருமொழியின் மூன்றாம் பத்தின் ஏழாம் பாசுரம், பதினோறாம் திருமொழியின் எட்டாம் பத்தின் எட்டாம் பாசுரம். ஆக மொத்தம் 58 பாசுரங்கள்.


"  திருகுறுந்தாண்டகத்தின் " ஏழு, பண்ணிரண்டு, பதிமூன்று மற்றும் பத்தொன்பதாம் பாசுரம் உட்பட மொத்தம் நான்கு பாசுரங்கள்
.


" திருநெடுந்தாண்டகத்தின் " 11, 12, 14, 18, 19, 22, 23, 24, 25 ஆம் பாசுரங்களுடன் சேர்த்து மொத்தம் 9 பாசுரங்கள்.



" சிறிய திருமடல் " இல்  ஒரு பாசுரமும், " பெரிய திருமடல் " இல் ஒரு பாசுரமும்.


ஆக மொத்தம் ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்துள்ள பாசுரங்கள் மொத்தம் 73.


ஆக திருவரங்கத் திருப்பதியின் ஸ்ரீ.ரங்கனாதனை மங்களாஸாஸனம் செய்த பதினோரு ஆழ்வார்களின் மொத்த பாசுரங்கள் 247 .



























திருவாய் மொழியும் திருமாலின் திருவருளும்

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் அடியேன் மகளின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது திருமாலின் திருவருளால் அடியேனுக்குக் கிடைத்த பாக்கியம் பற்றி கீழே விவரிக்கிறேன்.



அதற்கு முன்பு சில கருத்துக்கள் - அடியேன் நடுத்தர வயதில் இருந்த பொழுது, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தின் பெரியாழ்வாரின், திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் முதல் திருமொழி, இரண்டாம் பத்தின் 4,7, 8 மற்றும் ஐந்தாம் பத்தின் 4 ஆம் திருமொழி ,  திருப்பாவை, பெருமாள் திருமொழியில் 42 பாசுரங்கள் ( 3, 4, 8 மற்றும் 10 ஆம் திருமொழி ), ய திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலானாதிபிரான், கண்ணிந்நூண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழியில் 120 பாசுரங்கள் ( முதல் பத்தில் 1, 2, 3, 4, 5, 7, 9,  இரண்டாம் பத்தில் 2, 3 மற்றும் ஐந்தாம் பத்தில் 3, 7 , 8 ஆம் திருமொழி ),  இயற்பாவில் பெரிய திருமடல் தவிர்த்து மற்ற அனைத்து பாசுரங்கள்,
திருவாய் மொழியின் முதல் பத்து , கோயில் திருவாய் மொழி பாசுரங்கள் , இராமாநுச நூற்றந்தாதி என சுமார் 1350 பாசுரங்கள் வரை அனுசந்தித்து மனப்பாடம் செய்திருந்தேன்,



மேற்கொண்டு அடியேனுக்கு சந்தை எடுத்த வானமாமலையை சேர்ந்த ஒரு ஸ்வாமி ( அவர் திருநாமம் அடியேனுக்கு நினைவில் இல்லை. அவர் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்தவர். அவர் பரமபதித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன)  மூலமாக பல பாசுரங்களும், பின் அடியேன் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, வானமாமலை ஸ்ரீ.தெய்வநாயகன் ஸ்வாமி அவர்கள் சந்தை முறை பாசுரங்களை ஒலிநாடாவில் பதிவு செய்ததை மூலமாகக் கொண்டும் மேற்கண்ட பாசுரங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.



பின்னர் அடியேன் கவனம் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் பார்ப்பதில் சென்றுவிட்ட காரணத்தால் மேற்கொண்டு பாசுரங்களை மனப்பாடம் செய்யவில்லை. ஆனால் திருவல்லிக்கேணி ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலில் பல உற்சவங்களில் திருவாய்மொழி சாதிக்கப்படும் நிலையில் கோஷ்டிக்கு செல்லும் பொழுது, பாசுரங்களை அறியாத அடியேன் வெறுமனே கோழ்டியில் அமர்ந்திருந்தது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இருந்தாலும் மேற்கொண்டு பாசுரங்களை மனப்பாடம் செய்ய மனம் ஈடுபடவில்லை.


இந்த நிலையில் தான் அடியேன் 2013 ஆம் ஆண்டு மற்றொரு முறை அமெரிக்கா சென்றிருந்த பொழுது, அடியேன் மகளுக்கும் மற்றும் அங்குள்ள வேறு சிலருக்கும்   அடியேன் உறவினரும்    திருவிடவெந்தை தீர்த்தகாரருமான ஸ்ரீ.கோபி ஸ்வாமி அவர்கள் திருவாய்மொழி சந்தை வகுப்பு    ( அமெரிக்க நேரப்படி காலையிலும், பாரத தேஸத்து நேரப்படி மாலையிலும்) எடுத்துக் கொண்டிருந்தார். அடியேன் காலை தூங்கி எழுந்த பிறகு மாடியிலிருந்து கீழே வருவேன். அப்பொழுது அடியேன் மகள் சந்தை வகுப்பில் இருப்பார். ஒரு நாள் அடியேனிடம் " அப்பா, வெருமனேதானே இருக்கிறாய், நீயும் சந்தையில் கல்ந்து கொள்ளேன் " என்று சொன்னாள். அப்பொழுதுதான் அவரிடம் அடியேனுக்கு 60 வயதுக்கு மேல்  ஆகிவிட்டது, இனிமெல்லாம் அடியேனால் சந்தையில் பாசுரங்களைக் கற்றுக் கொண்டு நினைவில் வைத்திருக்க இயலாது என்று சொன்னேன். அப்பொழுது அவர், " மனப்பாடம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, நாங்கள் கற்றுக் கொள்வதை கேட்டு, அந்த பாசுரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளேன் " என்று கூறினார்.

அடியேனும் அடுத்த நாள் அந்த சந்தையில் கலந்து கொண்டேன். அப்பொழுது ஸ்ரீ.கோபி ஸ்வாமிகள் , திருவாய்மொழியில் பத்தாம் பத்தின் முதல் திருமொழியான " தாள தாமரைத் , தடமணி வயல் திருமோகூர் " என்று தொடங்கும் பாசுரங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இங்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். திருவாய்மொழியில் வரிசையாக இல்லாமல் ஒவ்வொரு பத்தையும் மாற்றி மாற்றி சொல்லிக் கொடுப்பார்களாம். அதனால் அவர் முதல் பத்து முடித்து, பின் பத்தாம் பத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்,



திருவாய் மொழியின் பத்தாம் பத்து பாசுரங்களும், ஸ்ரீ.கோபி ஸ்வாமிகள் அவர்கள் சொல்லிக் கொடுத்த முறையும், அவரின் நாவின் இனிமையும் அடியேனை மிகவும் கவர்ந்தது. ஆதலால் அன்று முதல் தொடர்ந்து சந்தையில் கலந்து கொண்டு பாசுரங்களை கற்று மனப்பாடம் செய்து வந்தேன். மேலும் அப்பொழுதைக்குப் பிறகு ஆஸ்திரேலியா சென்றமுறை வந்து ஓராண்டு இருந்த பொழுது பல பாசுரங்களை மனப்பாடம் செய்து முடித்தேன். ஆனால் மேலும் சுமார் 400 பாசுரங்கள் வரை திருவாய்மொழியில் மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. திருவல்லிக்கேணி வந்த பிறகு  கடந்த  ஒராண்டில் வெரும் 99 பாசுரங்கள் மட்டுமே மனனம் செய்யமுடிந்தது. ஆனால் அடியேன் மனதில் வெகு விரைவில் மீதமுள்ள பாசுரங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற எண்ணமிருந்ததே தவிர அதனை செயல்படுத்த முடியவில்லை.



அடியேன் மகள்களிடம் இனிமேல் அடியோங்களை வெளிநாடுகளுக்கு அழைக்காதீர்கள் . திருவல்லிக்கேணியில் இருந்து கொண்டு பெருமாளை நேரில் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். ஆனால் இந்த ஆண்டு , தவிர்க்க முடியாத காரணத்தால் ஆஸ்திரேலியா வர நேர்ந்தது,



இதன் காரணம் என்ன? எல்லாம் நம் எம்பெருமான் திருமால் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ.நரசிம்ம ஸ்வாமி திருவருளே. ஆம், இங்கு வந்ததிலிருந்து இன்று வரை கடந்த நான் கு மாதங்களில் திருவாய்மொழியின் 235 பாசுரங்களை அடியேன் மனப்பாடம் செய்துவிட்டேன். இன்னும் 66 பாசுரங்கள் மட்டுமே உள்ளன, அதிலும் ஊருக்கு திரும்புவதற்குள் எவ்வளவு மனப்பாடம் செய்ய முடியுமோ அவ்வளவையும் மனப்பாடம் செய்ய எம்பெருமான் அருள்புரிவான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அடியேனுக்கு உள்ளது.



" நீ சென்னையில் இருந்தால் , உன்னால் மிகக் குறைந்த அளவில் மட்டுமே மனப்பாடம் செய்யமுடியும் , அதனால் நீ உன் மகள் இல்லத்திற்கு சென்று, அங்கு நிறைய பாசுரங்களை மனப்பாடம் செய் " என்று திருவருளுடன் அடியேனை எம்பெருமான் இங்கு அனுப்பியதின் காரணம் அடியேனை உவகை கொள்ள வைக்கிறது.


எம்பெருமானின் திருவடித் தாள்களில் வணங்கி அடியேனுக்கு திருவாய்மொழியின் மொத்த பாசுரங்களையும் விரைவில் நிறைவு
செய்யும் பாக்கியத்தை அருளியமைக்கும், அதே போல் அடியேனை ஊக்குவித்த அடியேனின் மூத்த மகளின் எண்ணத்திற்கும், அடியேனை பாசுரங்களில் ஈடுபாடு கொள்ளும் வகையில் மிக அழகாகவும், நேர்த்தியாகவும், இனிமையான குரலிலும் கற்பித்த ஸ்ரீ.கோபி ஸ்வாமி அவர்களுக்கும்  அடியேன் மிக்க கடமைபட்டுள்ளேன்












 

நன்றி மறப்பது நன்றன்று ,

 

 நன்கு வாழ வைத்தவர்களை என்றும் மறக்காமல் இருப்பது மிகவும் நன்று. என் வாழ்க்கையை வளப்படுத்திய ஸ்ரீ.திருமலை அனந்தான்பிள்ளை நரசிம்மன் ஸ்வாமி பற்றிய அடியேனின் சிறு குறிப்பு.

 

நிறுவனத்தை தொடங்கிய ஸ்ரீ.டி.வி.சுந்தரம் ஐயங்கார் அவர்களிடம் முதலில் வேலைக்குச் சேர்ந்து , பின் காலத்தில் சுந்தரம் சாரிடியின் நிர்வாக இயக்குனராக இருந்த டிஏடி சாரி என்று திருவல்லிக்கேணியில் பிரபலமானவரும், ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலின் முன்னாள் அறங்காவலராக இருந்தவரின் இளைய சகோதரருமான ஸ்ரீ.டி.ஏ. திருவேங்கடாச்சாரியர் ஸ்வாமியின் மூத்த குமாரர் ஸ்ரீ.டி.ஏ.நரசிம்மன் ஸ்வாமி ஆவார்கள். திருவல்லிக்கேணி ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலின் ஸ்தல பெருமாளான மூலவர் ஸ்ரீ.யோகா நரசிம்மர், உற்சவர் ஸ்ரீ.தெள்ளியஸிங்கரிடம் அபார பத்தி கொண்டவர். அவர் டிவிஎஸ் நிறுவனத்தைச் சார்ந்த பிரேக்ஸ் இந்தியா தொழிற்சாலையில், மார்க்கெடிங் பகுதியில் ஆரம்பத்தில் துணை மேலாளராகவும், பிற்காலத்தில் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்றவர்.

 

அடியேனின் மீது மிகுந்த பற்று கொண்டவரும், அடியேனின் இன்றைய வாழ்க்கை நலமுடனும், வளமுடனும் இருப்பதற்கு அவர்தான் முக்கிய காரணம். அடியேனை அவரின் உடன்பிறவா சகோதராக வழி நடத்தி, இளமை வயதின் அறியாக் காலத்திலே அடியேன் செய்த சில தவறுகளை சரி செய்து, அடியேனை நேர்படுத்தி நல்ல திசையில் திருப்பிவிட்டவர் அவர். இத்தனைக்கும் அவரை அடியேன், பிரேக்ஸ் இந்தியாவில், நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போதுதான்  முதலில் சந்தித்தேன். இப்படி முன் அறிமுகம் இல்லாத அடியேனை , நேர்முகத் தேர்வில் அவரின் கேள்விகளுக்கு அடியேன் அளித்த பதில்களும், செய்கைகளும் அவருக்கு பிடித்துப் போய், நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த 49 பேரில் அடியேனை மட்டும் தேர்ந்தெடுத்தார்.

 

இனி அடியேனின் ஆரம்பகால செய்திகளையும் , அவர் எப்படி என்னை வளப்படுத்தினார் என்பது பற்றிய நிகழ்வுகளையும், சாதாரன வழக்கு மொழியில்  கீழே வெளிப்படுத்தியுள்ளேன்.

 

1970 ஆம் ஆண்டு, அப்பொழுது எனக்கு 18 வயது. அப்பொழுது நான் வைஷ்ணவா கல்லூரியில் பட்டப் படிப்பிற்கு சேர்ந்திருந்தேன். அச் சமயம் எனது இரண்டாவது மூத்த சகோதரர் அவரின் BA படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தந்தையை மிக இளமைப் பருவத்திலேயே இழந்திருந்த எங்களின் வளர்ப்புக்கும், வளர்ச்சிக்கும் எம்பெருமான் அனுக்ரஹத்தால்,  அடியோங்களின் தாயாரும், அடியோங்களின் தகப்பனாரின் தாய் மட்டுமே காரணம். அப்பொழுது Brakes India நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் மூலம் என் சகோதரருக்கு வேலை கேட்டுக் கொண்டிருந்த பொழுது, அங்கு குமாஸ்தா வேலைக்கு , பட்டப் படிப்பு முடித்தவர்களை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்று அவர் கூறினார். அதனால் எனது தாயார் அப்படி என்றால் தனது அடுத்த மகனான என்னை , நானும் படிப்பை முடித்துவிட்டு அவதிப்பட வேண்டாம் என்றும் காரணத்தினால், எனக்கு வேலை வாங்கிக் கொடுக்கும்படி அவரிடம் கூறினார்.

 

படிப்பை நிறுத்துவதில் விருப்பமில்லை என்றாலும், தாயின் கட்டளையை மீற முடியாத காரணத்தினால், அந்த நண்பர் மூலம் நான் நேர்முகத் தேர்வுக்கு நிறுவனத்திற்கு சென்றேன். அங்குதான் அடியேன் மேலே குறிப்பிட்ட   ன் துணை மேலாளராக இருந்த திரு.திருமலை அனந்தான்பிள்ளை நரசிம்மன் ஸ்வாமி என்னை வேலைக்கு தேர்வு செய்தார். முதல் வருடம் தினசரி சம்பளத்துடன் தற்காலிக வேலைதான். அடுத்த வருடம் என் வேலை செய்யும் திறமையை புகழ்ந்து என்னை நிரந்தர ஊழியராக ஆக்குவதாக் கூறினார். ஆனால் ஒரே ஒரு வேலை தான் என்ற காரணத்தினால், மத்திய அரசில் அப்பொழுது பெரும் பதவி வகித்துக் கொண்டிருந்த ஒருவரின் சிபாரிசினால் , வேறு ஒருவருக்கு அந்த வேலை கிடைக்க நான் வெளியேற்றப்பட்டேன். இருந்தும் அப்பொழுது ஸ்ரீ. நரசிம்மன் ஸ்வாமி அவர்கள் என்னிடம் “ கவலை கொள்ளாதே, உன் உழைப்பையும், நேர்மையையும், திறமையையும் நான் அறிந்தவனாகையால்,உனக்கு வெகு விரைவில், கண்டிப்பாக வேலை வாங்கித் தருகிறேன் “ என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். எம்பெருமானின் அனுக்ரஹத்தால், அவரின் முயற்சியின் மூலம் எனக்கு இரண்டு வாரங்களுக்குள்ளாகவே , நிரந்தர பணி நியமனம் கிடைக்கப்பெற்றேன். எம்பெருமான் அனுக்ரஹம் எப்படி என்றால் , நான் வேலை இழந்த காலத்தில் இருந்த சென்ன கேசவப் பெருமாள் கோயிலின் தேரடி தெருவில் வசித்து வந்ததால், ஸ்ரீ.கேசவப் பெருமாளை வேண்டிக் கொண்டு, அங்குள்ள ஸ்ரீ.சக்கரத்தாழ்வார் ஸன்னதியை தினசரி 12 முறை ப்ரதக்ஷணம் செய்து கொண்டிருந்ததால் பெருமாள் அனுக்ரஹத்தின் மூலம் இந்த பணி நிரந்தரமாகக் கிடைக்கப்பெற்றது.

 

அவரின் வழிகாட்டுதலின் படி , என் பணி நல்லபடியாக போய்க் கொண்டிருந்த வேளையில்தான் ஒரு விபரிதம் நடந்தது. அது 1977 ஆம் ஆண்டு, அந்த நிறுவனத்தில், கம்யூனிஸ்ட்கள் எப்படியாவது, பாடி பகுதியில் உள்ள அனைத்து TVS நிறுவனங்களிலும், உள்ள தொழிற்சங்கங்களை வளைக்க எண்ணி , தொழிலாளர்களையும், ஊழியர்களையும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். மிகச் சிலரை தவிர மற்ற எல்லோரும் இந்த கம்யூனிஸ்ட் வாதிகளின் வார்த்தை ஜாலங்களால் ஈர்க்கப்பட்டு, தேவையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால், அங்குள்ள தொழிற்சாலைகள் தொடங்கப்பட்ட 17ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அந்த நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

 

தினசரி  தொழிற்சாலைகளில் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடைபெற வைத்து , ஊழியர்களையும் , தொழிலாளர்களையும் மேடை ஏறி நிர்வாகத்திற்கு எதிராக பேச வைத்தனர். அப்பொழுது உடனிருந்த நண்பர்கள் பலர், “ ராகவன் நன்றாகப் பேசுவான். அவனையும் பேச சொல்லுங்கள்” என்று அங்கிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களான கேடிகே.தங்கமணி, விபி.சிந்தன் போன்றவர்களிடம் சொல்ல, நானும் என் இளமை முறுக்கு காரணமாகவும், மற்றவர்களின் புகழ்ச்சிக்கு மயங்கியும் , என் வருங்காலத்தைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல், மேடை ஏறி, நிர்வாகத்தை எதிர்த்து,  வீராப்பாகப் பேசி விட்டேன்.  ஆனால் இந்த வெற்று கம்யூனிஸ்ட்களால் அந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தை கடைசி வரையில் கைப்பற்ற முடியாமல் போய்விட்ட காரணத்தினால், அங்கு அவர்களுக்காக போராட்டங்களில் கலந்து கொண்டு, நிர்வாகத்திற்கு எதிராக இருந்த தொழிலாளர்களையும், ஊழியர்களையும் அம்போ என்று விட்டுவிட்டு அவர்கள் வேறு தொழிற்சாலைகளில் தங்கள் கைவரிசையைக் காட்ட சென்று விட்டனர்.

 

இந்த நேரத்தில் அனைத்து TVS தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களை எடுக்க முடிவு செய்து, பலரையும் முதலில் பணி இடை நீக்கம் செய்து , பின் நிறந்தரமாக வெளியேற்றவும் முடிவு செய்திருந்தனர். அந்த பட்டியலில் எனது பெயரும் இருந்ததாம். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சுமார் 300 தொழிலாளர்கள் / ஊழியர்கள் வேலை இழந்தனர். ஆனால் எனக்கு மட்டும் வேலை இழப்பில்லை. அதற்குக் காரணம் :-

 

இங்குதான் எனது மேலதிகாரியாக இருந்த ஸ்ரீ.நரசிம்மன் ஸ்வாமி எனக்காக மிக சிரமங்களை மேற்கொண்டு என்னை காப்பாற்றினார். காப்பாற்றியது மட்டுமல்லாமல் , என் வாழ்க்கையை வளமுறச் செய்ய மேற்கொண்டு எனக்கு வழிகாட்டியாக இருந்து, பறிபோக இருந்த எனது பணியையும் மீட்டுக் கொடுத்தார். என் வாழ்வை மாற்றி அமைத்தார். எல்லாம் ஸ்ரீ.தெள்ளியஸிங்கரின் அனுக்ரஹம்தான். அவர் நிறுவன உரிமையாளர்களிடம் எனக்காக வாதிட்டு, நான் உண்மையில் நல்லவன் என்றும், நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு நன்கு உழைப்பவன் என்றும், என்னுடைய சேர்க்கை சரியில்லாத காரணத்தால், நான் அப்படி நடந்து கொண்டேன் என்றும் சொல்லி , என்னுடைய நன் நடத்தைக்கு உத்தரவாதம் அளித்து, என்னை மீண்டும் அலுவலகத்தில் சேர்க்க வைத்தார்.

 

அதுமட்டுமின்றி, அதுவரையில் தொழிற்சாலைக்குள் இருந்த Warehouse ல் வேலை செய்து கொண்டிருந்த என்னை , அங்கிருந்தால் மீண்டும் கம்யூனிஸ்ட் அனுதாப தொழிலாளர்களுடன் சேர்ந்து எங்கே திசை மாறிவிடுவேனோ என்ற காரணத்தினால் , என்னை Marketing Office ல் அவரின் நேரடி மேற்பார்வையில் உள்ள ஒரு பணிக்கு , என்னை அமர்த்திக் கொண்டார். அதுமட்டுமல்ல தினசரி உணவு அருந்த உணவகத்திற்கோ மற்றும் கழிப்பரைக்கோ செல்லும் போது நான் அந்த தொழிலாளர்களிடம் தொடர்பு கொண்டுவிடுவேனோ என்று, என்னை கண்காணிக்க , நான் மேற்படி இடங்களுக்குச் செல்லும் போது, அவரின்  செயலாளரை என்னுடன் அனுப்புவார். அதே போல் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது, பேருந்துக்கு நிற்கும் பொழுது, நான் தவறான தொடர்பை தொடரக்கூடாது என்று, என்னை அவருடைய காரில் அழைத்துக் கொண்டு வந்து, Tailors Road பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுவார்.

 

இப்படி அலுவலக வாழ்க்கையில் மட்டுமல்லாமல், என்னுடைய முழு வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டவர். ஸ்ரீ.தெள்ளியஸிங்கரின் திருநக்ஷத்திரமான , கார்த்திகை ஸ்வாதி நக்ஷத்திரத்திலே பிறந்தவர். அதே கார்த்திகை திருநக்ஷத்திரத்திலே பிறந்தவர் எனது மூத்த மகள். ஒவ்வொரு ஆண்டும், அந்த நக்ஷத்திரத்தன்று ஸ்ரீ.தெள்ளியஸிங்கரை ஸேவித்து, உபயதாரராக பெருமாளுக்கு அன்று சிறப்பு அர்ச்சனை செய்து, தளிகையும் ஏற்பாடு செய்வார். அப்பொழுது மறக்காமல் என்னையும், என் குடும்பத்தினரையும் திருக்கோயிலுக்கு வரச் சொல்லுவார். அந்தக் காலங்களில் என்னுடைய மிகவும் வயதான பாட்டியார் திருக்கோயிலுக்குச் செல்லும் போது, அங்கு அவர் இருந்தால் அவரை விசாரித்து, அவருடைய செல்வாக்கினால் , பெருமாளை அருகில் சென்று ஸேவிக்க வைப்பார். எனது தாயார், சகோதரர்கள், மனைவி, மகள்கள் நலன் பற்றி என்னிடம் அடிக்கடி விசாரிப்பார். என் பாட்டியையும், தாயாரையும் நல்லபடிக்கு கவனித்துக் கொள்ளச் சொல்வார்.

 

அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் , ஸ்ரீ.தெள்ளியஸிங்கரிடம் அபார பத்தி கொண்ட அவர், பெருமாளின் ப்ரம்மோற்சவம் மற்றும் தவன உற்சவத்தின் போது , வயதாகிவிட்ட இந்த நிலையிலும் தவறாமல் வந்து கலந்து கொள்வார். அப்பொழுது திருக்கோயிலில் சந்திக்கும் என்னை நலமுடன் விசாரிப்பார்.

 

இப்படி முன் அறிமுகம் இல்லாத என்னை ,என் பணி ஈடுபாட்டின் காரணமாக மட்டும் இல்லாமல், என் மீது பாசமும் , நேசமும் கொண்டு, என்னை அவரின் உடன் பிறந்த சகோதரராகவே பாவித்து, என்னை நல்லபடிக்கு கவனித்து என் வாழ்வை வளப்படுத்திய அவரை நான் எப்படி மறக்க இயலும் ? அப்படி நான் மறந்திருந்தால் , ஒரு சாதாரண மனிதனாக வாழக்கூட லாயக்கற்றவனாகத்தான் இருந்திருப்பேன். என்றும் என் மனதில் இருக்கும் அவர் ,  என்றென்றும் நலமுடன் பல்லாண்டு, பல்லாண்டு  வாழ , நம் எம்பெருமான்களாகிய ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி , ஸ்ரீ.தெள்ளியஸிங்கர் ஸ்வாமியிடம் வேண்டிக் கொள்கிறேன்.

 

இந்த வருடம் ஸ்ரீ.தெள்ளியஸிங்கர் ப்ரம்மோற்சவத்தின் நான்காம் நாள் காலை, சூரியப் பிரபை புறப்பாட்டின் போது, கங்கை கொண்டான் மண்டபம் அருகில் பெருமாளை ஸேவிக்க அவர் வந்திருந்த போது , அடியேன் எடுத்த சில புகைப்படங்களை பதிவு செய்கிறேன்.

 

அடியேன் இராமானுச தாஸன்

நெ.வி.ராகவன்