Saturday, August 1, 2015

ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி ஜ்யேஷ்டாபிஷேகம்



பொய்கை ஆழ்வார், வையத்தை தகளியாகக் கொண்டும், பூதத்தாழ்வார், அன்பைத் தகளியாகக் கொண்டும் விளக்கேற்ற, அந்த விளக்கொளியிலே, பேயாழ்வாருக்கு உடன் காட்சி அளித்த எம்பெருமானை, பேயாழ்வார் -

" திருக்கண்டேன் * பொன்மேனி கண்டேன் * திகழும்
அருக் கண் அணி நிறமும் கண்டேன் * செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் * புரிசங்கம் கைக்கண்டேன் *
என்னாழி வண்ணன் பால் இன்று " என்று அருளிச் செய்தார்.

இப்படியாக ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற எம்பெருமான் , திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலே ஸ்ரீ.பார்த்தசாரதியாக எழுந்தருளியிருக்கிறான். அந்த எம்பெருமான் இன்று ( 01.08.2015 ) ஜ்யேஷ்டாபிஷேகம் கண்டருளினார்.

அன்று எப்படி ஆழ்வார்களுக்கு காட்சியளித்தானோ, அந்தக் கரிய மேனியன் ,அதே போன்று, இன்று எம்பெருமான் அனைவருக்கும் அளித்த காட்சியானது மெய் சிலிர்க்க வைக்கிறது.

" முடிச் சோதியாய் * உனது முகச் சோதி மலர்ந்ததுவோ ? * அடிச்சோதி நீ நின்ற * தாமரையாய் அலர்ந்ததுவோ ?*
என்ற நம்மாழ்வாரின் வாக்குப்படி, ஸ்ரீ.பார்த்தசாரதி, தன் சுய ரூபத்திலே  இன்று , அவன் திருமுக மண்டலமும், திருவடி தரிசனமும் அளித்தது வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

" எழுமைக்கும் எனதாவிக்கு * இன்னமுதத்தினை எனதாருயிர் *கெழுமிய கதிர்ச் சோதியை *மணிவண்ணனைக் குடக் கூத்தனை*
விழுமிய அமரர்  முனிவர் விழுங்கும் * கன்னற் கனியினை *
தொழுமின் தூய மனத்தராய் * இறையும் நில்லா துயரங்களே *"

ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த மேற்படி பாசுரத்தின் படி, தூய மனத்துடன் , நம் எம்பெருமானின் திருமேனி அழகையும் , அவன் சௌலப்யத்தையும் நாம் ஸேவித்தோமானால் , நம் எல்லாத் துயரங்களும் நம்மை விட்டு அகல்வதோடல்லாமல் , நம்மை என்றுமே நெருங்காது.

வருடம் தோறும், ஆடி மாதத்திலே பௌர்ணமி தினத்தன்று,  கஜேந்திரனுக்கு  மோக்ஷம் அளிக்கும் திருவல்லிக்கேணி எம்பெருமான் அடுத்த நாள் ஜ்யேஷ்டாபிஷேகம் கண்டருளுகின்றார்.
 இந்த நன்னாளில் மட்டும், வருடத்தில் ஒரே ஒரு நாள் நம் எம்பெருமானை, அவனுடைய அசல் ஸ்வரூபத்திலே தரிசிக்க முடியும். கவசங்கள் எல்லாம் களையப்பட்டு, ஸ்ரீ.பார்த்தசாரதியும் , உபயநாச்சிமார்களும், சுயமான திருமேனியிலே திருமஞ்சனம் கண்டருளுகின்றனர்.

எந்த விதமான சாற்றுப்படியிலும் நம்மை அப்படியே ஆட்கொள்ளும் ஸ்ரீ.பார்த்தசாரதி , பல உற்சவங்களில் பல, பல அலங்காரங்களுடன் காட்சி அளித்தாலும், இந்த சுயமான திருமேனியில் அவனை ஸேவிப்பது என்பதே பெரும் பாக்கியமாக ஸ்ரீ.வைஷ்ணவ அடியார்களால் கொண்டாடப்படுகிறது.அவன் திருமேனியில் உள்ள வடுக்களையும், குறிப்பாக அவனின் இடுப்பின் ஒரு தழும்பு காணப்பெருகிறது. இது, கண்ணன் , சிறு குழந்தையாக, ஆயர்பாடியில் விளையாட்டாக விஷமங்கள் செய்த காரணத்தினால் , அவனுடைய இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டி , அதனின் மறுபகுதியை உரலில் இணைத்து விடுகிறாள் யசோதை. அந்த கயிற்றின் அழுத்தத்தின் காரணமாக, வடு அப்படியே அவன் உடம்பில் தங்கிய காரணத்தினால் , தாமோதரன் என்ற திருநாமம் கொண்டு அழைக்கபடலானான், கண்ணன்.

அந்த தாமோதரனாகிய, கண்ணனே இங்கு ஸ்ரீ.பார்த்தசாரதியாக எழுந்தருளியிருக்கிறான். எனவே அவன் திருமேனியில் அப்படியே பாங்காக அந்த கயிற்றின் வடுவானது அமைந்துள்ளது. இதனை ஸேவிக்கக் கூடிய பாக்கியம் இன்று திருக்கோயிலுக்கு வரும் அத்துணை அடியார்களுக்கும் கிடைக்கப் பெருகிறது. வருடம் முழுவதும் நமக்குக் காட்சியளிக்கும் எம்பெருமானின் இன்றைய காட்சியானது, இதுவரையில் தினசரி ஸேவித்து வந்த அதே பார்த்தன் தானா இவன் என்ற எண்ணம் , நம் மனதினுள் எழும் அளவுக்கு மிக வித்தியாசமாகக் காட்சி அளிக்கின்றான், நம் அழகனாகிய ஸ்ரீ.பார்த்தசாரதி.

இன்று காலை 11,00 மணியளவில் தொடங்கிய ஜ்யேஷ்டாபிஷேகம் முடிய சுமார் 12.30 மணி ஆகிவிட்டது. குடம் குடமாய் பாலும், தயிரும், தேனும், இளநீரும் கொண்டு திருமஞ்சனம் . ஒவ்வொரு திருமஞ்சனத்தின் போதும் , அற்புதமான ஸேவை. பிறகு தட்டுத் திருமஞ்சனம்.

பிறகு பக்தர்கள் அனைவருக்கும்,  ஸ்ரீ.பார்த்தசாரதியின் திருமேனியிலே சாற்றப்பட்டிருந்த மஞ்சள் காப்பும், திருத்துளாயும், எம்பெருமான் திருமஞ்சனம் கண்டருளிய தீர்தமும் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. அடியார்கள் அனைவரும்  எம்பெருமானின் அசல் அர்ச்சாவதார ரூபத்தை அருகில் சென்று ஸேவித்து அனுபவிக்கும் பாக்கியம் அனைவருக்கும் அருளப்பட்டது.

ஆக மொத்தத்திலே இன்றைய தினம் , அனவருக்கும் ஒரு நன்னாளாக, பொன்னாளாக அமைந்துவிட்டது அனைவரின் பாக்கியம்.

 


 

Wednesday, June 24, 2015

ஸ்ரீ.சாலிஹோத்ர மஹரிஷிக்கு அருள் பாலித்த ஸ்ரீ.வீரராகவன்.

நேற்று ( 23.06.2015 0 அடியேன் மனைவியுடனும், அடியோங்கள் குடும்ப மாப்பிள்ளை திருவிடவெந்தை தீர்த்தகாரர் ஸ்ரீ.கோபி ஸ்வாமியுடனும், அடியேன் அகத்து எதிர் பகுதியில் குடியிருக்கும் ஆழ்வார் திருநகரி ஸ்ரீ.ராமாநுஜம் ஸ்வாமியுடனும் மற்றும் அவரவர் தம் குடும்பத்தினருடனும் திருவள்ளூர். ஸ்ரீ.வீரராகன் எம்பெருமானையும், ஸ்ரீ.கனகவல்லித் தாயாரையும் ஸேவிக்க திருவள்ளூர் சென்றிருந்தோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் ஸ்ரீ.வீரராகவன் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோயிலில் சம்ப்ரோக்ஷாணம் நடைபெற்றது. சம்ப்ரோக்ஷணம் நடைபெற்ற போது அவ்வெம்பெருமானை ஸேவிக்க முடியாவிட்டாலும் ஒரு மண்டலத்திற்குள் ஸேவிப்பது மிகவும் விசேஷம் என்று பெரியோர்கள் கூறுவர். அதன்படி சம்ப்ரோக்ஷணம் நடைபெற்ற பொழுது திருவள்ளூர் செல்ல இயலவில்லை என்றபொழுதிலும் இரண்டு வாரங்களுக்குள்ளாகவாவது செல்ல முடிந்ததே என்ற மகிழ்ச்சியுடன் திருக்கோயிலுக்குச் சென்றோம்.





திருவிடவெந்தை தீர்த்தகாரருடன் சென்றது அடியோங்களுக்கு மிகவும் பாக்கியமாக அமைந்தது. ஆம். அங்கிருந்த திருக்கோயில் பட்டர்கள் அனைவரும் அவருக்கு மிகவும் தெரிந்தவர்கள் என்ற காரணத்தினால் ஸ்ரீ.வீரராகவன் தரிசனமும், ஸ்ரீ.கனகவல்லித் தாயார் தரிசனமும் மிகவும் அருமையாக கிடைக்கப்பெற்றோம். ஸ்ரீ.வீரராகவன் ஸன்னதியில் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக எம்பெருமானின் திருமுக மண்டலம் முதல் திருவடி வரை மிகவும் நிதானமாக கற்பூர ஹாரத்தியுடன் , அத்திருக்கோயிலின் ஸ்தல வரலாறுடன் பட்டர் எடுத்துக் கூற அடியோங்களுக்கு மிக ஆனந்தமான அனுபவமாக அந்த ஸேவை அமைந்தது. அது போலவே ஸ்ரீ. கனகவல்லித் தாயாரின் ஸேவையும்.







பிறகு திருக்கோயிலை வலம் வந்த போது , ஸ்ரீ.கண்ணன் ஸன்னதிக்கு பக்கத்தில் தற்பொழுது புதிய காட்சி வடிவத்துடன், ஸ்ரீ.சாலிஹோத்ர மஹரிஷிக்கு , எம்பெருமான் ஸ்ரீ.வீரராகவன் அருள்பாலித்து ஆட்கொண்டது  அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடியோங்கள் படித்ததை வைத்துக் கொண்டு , ஒரு சிறிய கட்டுரையாக இங்கே பகிர்கின்றோம்.


ஸ்ரீ.சாலிஹோத்ர மஹரிஷியானவர் எம்பெருமான் ஸேவை வேண்டி திருவள்ளூரிலே தவம் இருக்கிறார். அச் சமயம் அவருக்கு அருள் பாலிக்க எண்ணம் கொண்ட எம்பெருமான், ஒரு மிகவும் வயதான மனிதராக வடிவம் கொண்டு, அவரை சந்திக்க வருகிறார். ஸ்ரீ.சாலிஹோத்ர மஹரிஷியிடம் தனக்கு மிகவும் பசிப்பதாகவும் , தனக்கு அன்னமிடவும் வேண்டுகிறார். ஒரு வயதான முதியவருக்கு அன்னம் இடுவதை மிகவும் பாக்கியமாகக் கருதிய மஹரிஷி, அவரை அமர வைத்து, இலையை இட்டு, அவருக்கு அமுது படைக்கிறார். மிகவும் விரும்பி அமுதுண்ட எம்பெருமான், தான் மிகவும் களைப்புற்றிருப்பதாகவும், அதனால் தான் சிறிது நேரம் படுத்துக் கொண்டு ஓய்வு எடுப்பதற்கு ஒரு சரியான் உள் "எவ்வுள் " எது என்று கேட்க , அந்த மஹரிஷியும், தன் குடிசையைக் காட்டி அந்த இடம்தாம் அவர் ஓய்வெடுக்க சரியான  " உள் " என்று காட்ட , எம்பெருமானும் அங்கு சென்று ஸயனித்துக் கொள்கிறார். எம்பெருமானுக்கு சிறிது குளிரச் செய்யவே, அதனைக் கண்ட சாலிஹோத்ர மஹரிஷி, ஒரு போர்வையை எடுத்து அவருக்கு சாற்றிவிடுகிறார். எம்பெருமானும் கண் அயர்ந்து கொள்கிறார். சாலிஹோத்ர மஹரிஷியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

எம்பெருமான் கண் அயர்ந்த சிறிது நேரத்திலேயே தான் யார் என்பதை மஹரிஷிக்கு உணர்த்தவும், அவருக்கு அருள் பாலிக்கவும் எண்ணினார். அதன் காரணமாகத் தன் சுயரூபத்தை பள்ளிகொண்ட நிலையிலேயே , ஸ்ரீ.வீரராகவனாக  மாறி, காட்சியளிக்கிறார். இதனைக் கண்ணுற்ற சாலிஹோத்ர மஹரிஷியும் தனக்கு எம்பெருமானின் அனுக்ரஹம் கிடைக்கப் பெற்றதை எண்ணி பேருவகை கொண்டதோடு, தனக்கு காட்சி அளித்த அதே நிலையிலேயே அங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் கொடுக்கும்படி  வேண்டினார். ஸ்ரீ.வீரராகவனும் அவ்வாறே காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக மஹரிஷிக்கு வாக்களித்தார். இன்றும் நாம் ஸ்ரீ.வீரராகவன் ஸயன திருக்கோலத்தில் , அன்று சாலிஹோத்ர மஹரிஷி சாற்றிய போர்வையைப் போலவே ஒரு போர்வையை தன் மேல் சாற்றிக் கொண்டுதான் அடியார்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

திரு எவ்வுள் ஸ்ரீ.வீரராகவன் , வைத்திய வீரராகவன் என்னும் பெயருடனும் அழைக்கப்படுகிறார். இவரை நாடி வரும் பக்தர்களின் நோய் நொடிகளை தீர்த்து வைக்கிறார் இவ்வெம்பெருமான். இங்கு வரும் பக்தர்கள் தங்கள் நோய் தீர , வெல்லமும், உப்பும் கொண்டு வந்து , இங்குள்ள திருக்குளத்தில் கரைத்தால் , அவர்களின் நோய்களும் அவர்களை விட்டு கரைந்துவிடும் என்பது அதீத காலம் தொட்டு, பக்தர்களின் நம்பிக்கை.

இத்திருக் கோயிலில் குடி கொண்டிருக்கும் தாயார் ஸ்ரீ. கனகவல்லித் தாயார் வாத்சல்யத்தை வெரும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரது சரித்திரம் பி வருமாறு :-

ஒரு காலத்தில் தர்மசேனபுரம் என்ற ஒரு தேஸத்தை ஆண்ட அரசன் தர்மசேனட்உக்குமனின் மகளாக, வசுமதி என்ற திருநாமத்துடன் அவதரித்தார் இத்திருத்தலத் தாயார். ஸ்ரீ.வீரராகவன் மானுட ரூபம் கொண்டு , தர்மசேனனை அணுகி , அவள் மகளைத் தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டார். அப்பொழுது அங்கு வந்திருப்பது எம்பெருமான் என்பதை அறியாத தர்மசேனன், அவருக்கே தன் மகளை திருமணம் செய்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டான். திருமணம் முடிந்த பிறகு , தான் ஸ்ரீ.வீரராகவனாக அங்கு எழுந்தருளியிருப்பதை அவர்களுக்கு உணர்த்த , அரசனும் மிக மகிழ்ச்சியுடன் , தன் மகளை அவருடன் அனுப்பி வைத்தான். பிறகு ஸ்ரீ.விரராகவன் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்கு வந்த தாயார் ஸ்ரீ.கனகவல்லித் தாயார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். கனகம் என்றால் ஸ்வர்ணம் , அதாகப்பட்டது தங்கமாகும். தங்கமாக இருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, மிகுந்த நேயத்துடன் ஸேவை ஸாதிக்கிறார் ஸ்ரீ.கனகவல்லித் தாயார்.

அடியோங்கள் குடும்பத்து குல தெய்வமான ஸ்ரீ.வீரராகவனும், ஸ்ரீ.கனகவல்லித் தாயாரையும் மீண்டும் ஸேவித்து விட்டு வந்தது அடியோங்களுக்கு மிகுந்த மன திருப்தியை கொடுப்பதுடன் , பக்தர்கள் எல்லோரும் திருவள்ளூர் சென்று பெருமாளையும் , தாயாரையும் ஸேவித்து , அவர்கள் அருளைப் பெரும்படி வேண்டிக்கொள்கிறோம்.

குறிப்பு :- அடியோங்கள் குடும்பத்து முன்னோர்களுக்கு காட்சி அளித்து, அடியோங்கள் குடும்பம் ஆலமரமாக தழைத்தோங்க அருள் பாலித்த சம்பவங்களை சென்ற ஆண்டு , " வீரராகவனும், விஜயராகவனும் " என்ற தலைப்பில் அடியேன் ஒரு சிறிய பதிவிட்டுள்ளேன். அதனை அன்பர்கள் அனைவரும் படிக்கும்படி விண்ணப்பிக்கின்றேன்.

மேலும் இங்கு பதிவிட்டுள்ள புகைப் படங்கள் முகநூலில் பதிவிட்டிருந்த சில அன்பர்களின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. முகம் தெரியாத அந்த அன்பர்களுக்கு அடியேனின் நன்றி.







 

Sunday, March 8, 2015

முதலாழ்வார்களும் அவர்களின் பெயர் காரணமும்.

ஆழ்வார்கள் பதின்மரில் முதலாழ்வர்கள் மூவர். அவர்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

பலருக்கும் இந்த ஆழ்வார்களுக்கு எப்படி இம்மாதிரியான பெயர்கள் உண்டானது என்று வியப்பாக இருக்கும். ஆனால் இந்த மூன்று ஆழ்வார்களுக்குமான பெயர்களுக்கு காரணம் உள்ளது.அது பற்றி கீழே விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பு :- அடியேனின் இக்கட்டுரைக்கு, மூல காரணமாக இருப்பது தென் திருப்பேரை .ஸ்ரீ. அரவிந்தலோசனன் ஸ்வாமி அவர்கள் அருளிச் செய்த உபன்யாசமாகும். பல தகவல்கள் அவரின் உபன்யாசத்திலிருந்து திரட்டப்பட்டது. ஆகவே முதற்கண் அந்த ஸ்வாமிக்கு அடியேனின் மானசீக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொய்கை ஆழ்வார் :-


பொய்கை என்பது தாமரை புஷ்பத்தைக் குறிக்கும். அப்படியான தாமரை புஷ்பங்கள் மலர்ந்திருக்கக் கூடிய குளத்திலே அவதாரம் பண்ணினார். அதன் காரணமாக அவருக்கு பொய்கை ஆழ்வார் என்ற பெயர் ஏற்பட்டது. எந்த தாய் , தந்தைக்கும் மகனாகப் பிறக்காமல் , அயோநிஜராக பிறந்தவர். அயோநிஜர் என்றால் தானாகத் தோன்றியவர்.

 பொய்கை ஆழ்வார் , காஞ்சிபுரத்திலே, திருவெக்கா எம்பெருமான் ஸ்ரீ.யதோத்தகாரி ஸன்னதிக்கு அருகிலுள்ள பொய்கையில்,
ஐப்பசி மாதம் திருவோணம் நக்ஷத்திரத்திலே அவதரித்தார்.
நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் அருளப்படுவதற்கு முதல் காரணமாக இருந்த மூன்று ஆழ்வார்களில் இவர் முதல்வர்.

பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த பிரபந்தமானது " முதல் திருவந்தாதி " என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருவந்தாதியிலே -
" வையம் தகளியா, வார்கடலே நெய்யாக * வெய்ய கதிரோன் விளக்காக * செய்ய சுடர் ஆழியான் அடிக்கே * சூட்டினேன் சொல்மாலை * இடராழி நீங்குகவே என்று " தொடங்கி நூறு பாசுரங்கள் இவரால் அருளப்பெற்றது.

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.


பூதத்தாழ்வார் : -

பூதம் + ஆழ்வார்  = பூதத்தாழ்வார்.



பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது. புரசத்காயாம் என்றால் இருக்கக் கூடியது என்று அர்த்தம்.

இந்த உலகத்திலே இருக்கக் கூடிய பொருள்கள் எவை ? அவைகள் நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் தீ. இவற்றை பஞ்ச பூதங்கள் என்று கூறுகிறோம். எக்காலத்திலும் அழியாதது இவைகள்.

அப்படியென்றால் இவ்வுலகத்திலே நிலைத்து இல்லாமல் அழியக் கூடியவை எவை ?  அவைகள் பலம், கல்வி, அழகு, செல்வம் போன்றவை.

உதாரணத்திற்கு பலத்தை எடுத்துக் கொள்வோம்.  ஒரு மனிதனுடைய  பலம் நிலைத்து நிற்கக் கூடியதா என்று கேட்டால் , இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒருவர் தாம் இளைஞராக இருக்கும் பொழுது, மிகச் சுலபமாக 50, 100, ஏன் சிலரால் 200 கிலோ வரை கூட உள்ள பொருட்களை தூக்க முடியும். இதற்குக் காரணம் அவருடைய பலம். அதே மனிதன் சுமார் 50, 60 வயதைக் கடந்த பிறகு அவரால் 
10 அல்லது 20 கிலோ எடையுள்ள பொருளைக் கூட தூக்க முடியாது. காரணம் அவர் அந்த வயதில் தன் பலத்தை இழந்து விட்டிருப்பார். பலம் நிலையில்லாதது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கல்வியும் அழியும் தன்மை கொண்டதே. நன்கு கல்வி கற்றவர்கள், இளம் வயதில் நல்ல அறிவாற்றல் பெற்று விளங்குவார்கள். காலம் செல்லச் செல்ல, வயோதிக நிலையை அடையும் பொழுது, நமக்கு
நினைவாற்றல் குறைந்து , நாம் கற்ற கல்வியின் திறத்தினை நினைவில் கொள்வது கடினம். ஆகவே கல்வியும் நிலையற்றது என்பது திண்ணம்.

அதே போல்தான் அழகு. அழகு மாறும் தன்மை கொண்டது. ஒரு பெண்மணியை எடுத்துக் கொண்டால் , அவரின் இளைமைப் பிராயத்திலே மிகவும் அழகாக இருப்பார்.  ஆனால் ஆண்டுகள் கழியக் கழிய, அப் பெண் முதுமை அடைந்த காலத்தில் அவரின் அழகு மறைந்து போய் இருக்கும். எப்படி இருந்த இவர் எப்படி மாறிவிட்டார் என்று நினைக்கத் தோன்றும். இது இயற்கையின் நியதி.  பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொருந்தும். ஆகவே அழகு என்பதும் நிலையில்லாததாகிறது. 

அடுத்தது செல்வம் . இதுவும் நிலையில்லாததுதான். இன்று பணக்காரனாக இருப்பவன் சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழந்து ஏழையாகிவிட்டிருப்பான். எத்தனையோ செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டிருப்பதை பலரும் கண்கூடாக பார்த்திருப்பீர்கள். ஆகவே செல்வமும் நிலையற்றதுதான்.

மேலும் நிலையில்லாத பலமும், அழகும், அறிவும், செல்வமும் உடையவன் தான் உயர்ந்தவன் என்றும்,  இவை அணைத்தும் இல்லாதவன் தாழ்ந்தவன் என்ற எண்ணமும் தவறு. 

பின் எதுதான் நிலையாக இருக்கக் கூடியது ?

அது பகவத் பக்தி, பகவத் ஞானம், பகவானைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்னும் வைராக்கியம். இவைகள் தான் கண்டிப்பாக ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அது இருந்தால் என்றும் அழியாத தன்மையுடனே ஒருவன் இருப்பான். இம் மண்ணுலகில் மட்டுமல்ல, விண்ணுலகம் அடையும் போதும் அது கூடவே இருக்கும்.

மேலே சொன்ன பலம், கல்வி, அழகு, செல்வம் இவை அனைத்தும் ஒருவரிடம் இருந்தாலும் அவர் இல்லாதவனாகவே கொள்ளப்படுவான். ஆனால் எவர் ஒருவரிடம் பகவத் பக்தி, ஞானம், வைராக்கியம் இருக்கிறதோ அவர் மட்டுமே இருப்பவராகக் கொள்ளப்படுகிறார். அவரே நிலையானவர்.

ஆகவே இங்கே  நிலையாக இருப்பவன் என்றால் அது பகவானைப் பற்றி, ஸ்ரீமன். நாராயணனைப் பற்றி அறிந்திருப்பவனே ஆவான்.

பூதம் என்றால் நிலையானது என்று சொல்லி, அதற்கு உதாரணமாக பஞ்ச பூதங்கள் பற்றி குறிப்பிட்டோமல்லவா ? பூதத்தாழ்வார், அவ்வாறு எப்பொழுதும் ஸ்ரீமன்.நாராயணனைப் பற்றியும், மிகவும் பக்தியுடன், பகவானைத் தவிர வேறு விஷயம் ஒன்றும் இல்லை என்ற வைராக்கியத்துடன் இருந்தவர். இதன் காரணமாகவே இவர் பூதத்தாழ்வார் என்று அழைக்கப்பெற்றார்.

பூதத்தாழ்வார் அவதாரம் செய்த ஊர் , ஸ்ரீ.ஸ்தலசயணப் பெருமாள் எழுந்தருளியுள்ள திருத்தலமான திருக்கடல்மல்லை ஆகும். ஐப்பசி மாதத்திலே அவிட்டம் நக்ஷத்திரத்திலே , மாதவி புஷ்பத்தில், அவதரித்தவர் ஆழ்வார்களில் இரண்டாமவரான ஸ்ரீ.பூதத்தாழ்வார்.

பூதத்தாழ்வார் அருளிச்செய்த பிரபந்தமானது இரண்டாம் திருவந்தாதி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருவந்தாதியிலே ஆழ்வார்,
" அன்பே தகளியா * ஆர்வமே நெய்யாக *  இன்புருகு சிந்தை இடுதிரியா * நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன்* நாரணற்கு*
ஞானத் தமிழ் புரிந்த நான் * என்று தொடங்கி நூறு பாசுரங்களை அருளிச்செய்துள்ளார்.

பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.


பேயாழ்வார் :-


பெம்மை + ஆழ்வார்  = பேயாழ்வார்.

இங்கே இவ்வாழ்வாரின் பெயர் காரணத்தை தெரிந்து கொள்வதற்கு முன், நாம் சற்று தமிழ் இலக்கணத்தை நினைவு படுத்திப் பார்ப்போம். அதற்குண்டான ஒரு உதாரணத்தையும் பார்ப்போம்.

எம்பெருமானின் திருவடிகளை நாம் சேவடி என்று அழைக்கிறோம். அதை ஏன் அவ்வாறு அழைக்கிறோம் ? சேவடி என்றால் செம்மையாக இருக்கக் கூடிய அடி என்று பொருள். அடி என்றால் கால். செம்மை என்றால் சிவந்திருக்கக் கூடிய என்று பொருள்.  

தமிழ் இலக்கணத்திலே செம்மை இருந்து, பின்னால் அடி என்ற வார்த்தை சேர்ந்தால்,  " ம்மை " போய் விடும். மேலும் "செ " என்பது குறில், " அ " என்பது அகரம். "செ" என்ற குறிலுடன் " அ " என்ற அகரம் சேர்ந்தால்,  அந்த "செ" வானது நெடில் ஆகி, " சே " என்று மாறிவிடும்.  ஆகையால் சிவந்திருக்கக் கூடிய செம்மையான (திரு ) அடி உடைய எம்பெருமானின் திருப்பாதங்களை "சேவடி " என்கிறோம்.

அது போலவே " பெம்மை " என்றால் பெருமை உடையவர் என்று பொருள்.  இந்த " பெம்மை " யுடன்  "ஆழ்வாரின் "  முதல் எழுத்தான " ஆ " என்ற அகரம் சேர்ந்ததினால், இங்கும் " பெம்மை "
என்ற சொல்லில் "ம்மை"  போய்விடுகிறது. 
" பெ " என்ற குறிலும் " பே " என்ற நெடில் ஆகிறது.  ஆகவே இவ்வாழ்வார் " பேயாழ்வார் " என்று அழைக்கப்பெருகிறார். மஹாதாத்வயர் என்று ஸமஸ்கிருதத்திலே இவ்வாழ்வார்  அழைக்கப்படுகிறார்.  " மஹதா " என்றால் மிகப் பெரிய பெருமை உடையவர் என்று பொருள்.  மிகப் பெரிய பெருமை உடையவரான இவர்
" பேயாழ்வார் " என்று அழைக்கப்பெற்றார்.


பேயாழ்வார் , ஆதிகேஸவப் பெருமாள் குடி கொண்டிருக்கும் திருமயிலையிலே, ஐப்பசி மாதம் சதயம் திருநக்ஷத்திரத்திலே, அல்லி மலரிலே அவதரித்தவர் ஆவார்.

முதல் மூவரிலே, மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் அருளிச் செய்த திவ்யப் பிரபந்தமானது
" மூன்றாம் திருவந்தாதி " என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருவந்தாதியிலே ஆழ்வார் -

" திருக்கண்டேன், பொன் மேனி கண்டேன் *
திகழும் அருட் கண் அணி நிறமும் கண்டேன் *
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் * 
புரி சங்கம் கைக் கண்டேன் " என்று தொடங்கி
நூறு பாசுரங்களை அருளிச் செய்துள்ளார்.

பேயாழ்வார் திருவடிகளே சரணம்.


பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் ஒரே ஆண்டிலே , ஐப்பசி மாதத்திலே திருவோணம் தொடங்கி, அவிட்டம் , சதயம் என அடுத்தடுத்த திருநக்ஷத்திரங்களில் அவதரித்து, அடியார்களாகிய நாமெல்லாம் எம்பெருமானைப் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக பிரபந்தங்களை இயற்றிய காரணகர்த்தர்களாக இருந்து, இவர்களுக்குப் பின் வந்த மேலும் பல ஆழ்வார்களும் , அவர்களின் ஈரச் சொற்களிலே உதிர்த்த பிரபந்தங்களை நாமெல்லாம் பாராயணம் பண்ணி , பகவானை அனுதினமும் நினைத்து, நினைத்து மகிழ்ந்து உவகை கொள்ளும் விதமாக எம்பெருமான் மூலம் அருள் புரிந்த ஆழ்வார்களின் அடிபணிந்து, எம்பெருமான் திருவடிகளிலே
 சரணடைவோம். 













 

Sunday, March 1, 2015

அன்ன கேஸவனாகிய ஸ்ரீ சென்ன கேஸவன்

சென்னை மாநகர் இன்று பரந்து விரிந்து கிடக்கும் ஒரு நகரம். பாரத தேஸத்தின் நான்காவது பெரிய நகரம். இன்று சென்னை மாநகரம்தான் தமிழ் நாட்டு மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமான ஒன்று.

இப்படிப்பட்ட இந்த சென்னை நகரத்திலே ஒரு காலத்தில் கடற்கரையை ஒட்டி இரண்டு  கோவில்கள் இருந்ததுவும் அவை இப்பொழுது என்ன ஆனது அல்லது எங்கிருக்கிறது என்பது இன்றைய மக்களில் பெரும்பான்மையோருக்குத்  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆன்மிக நகரமாக விளங்கிய சென்னை இன்று காலப் போக்கிலே தனது பொலிவை இழந்து ஆடம்பரமான நகரமாக சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வந்துள்ளது. இன்று நவ நாகரிகத்தின் உச்சியை அது இன்னும் தொடவில்லை என்றாலும் அதை நெருங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி. இந்த விஷயங்கள் இங்கு தேவையில்லை என்றாலும் எப்படி இருந்த ஊர் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதை குறிப்பிடவே எழுதினேன்.

நிற்க, இன்று சென்னையின் மிக முக்கியமான பகுதிகளில் கடற்கரைக்கு எதிர்ப் புறம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் ஒன்று. ஆங்கிலேயர்கள் சென்னையை தங்களது நகராக்கிக் கொண்ட பின்பு அவர்களுக்கு ஒரு கோட்டை , கொத்தளம் தேவைப்பட்டது. அதனை எங்கு அமைப்பது என்று அவர்கள் தீவிரமாக ஆலோசித்து, கடைசியாக கடற்கரைக்கு எதிரே உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். மிக அதிகமான நிலப்பரப்புள்ள அந்த இடம் ஆங்கிலேய அதிகாரிகள் அனைவருக்கும் பிடித்துப் போனது. எனவே அங்கு கோட்டையைக் கட்ட முடிவு செய்தனர், ஆனால் அவர்களுக்கு அந்த இடத்தில் இருந்த கோயில்களானது அவர்கள் கட்ட நினைத்திருக்கும் கோட்டைக்கு இடைஞ்சலாக இருந்தது. எனவே அவர்கள் அக் கோயில்களை இடித்துவிட்டு, அந்த இடத்திலேயே கட்டிடம் கட்ட முடிவு செய்தனர்.

இந்தச் செய்தியானது , அந்தக் காலத்திலே தமிழ்நாட்டின் பெருஞ் செல்வந்தர் குடும்பத்தில் ஒன்றாகிய மணலியார் குடும்பத்திற்கு தெரிந்ததும் மிகவும் பதறிவிட்டனர். எப்படியாவது அக் கோயில்களைக் காக்க உறுதி பூண்டனர், ஆன்மிகத்திலே மிகுந்த பற்றுக் கொண்ட அக்குடும்பத்தினர். மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்து ஆங்கிலேயர்களிடம் அக் கோவில்களை அப்படியே விட்டுவிட்டு அதனை அடுத்து உள்ள இடத்தில் கோட்டையை கட்டிக்கொள்ள வேண்டினர். இதற்கு சிறிதும் செவிமடுக்காத ஆங்கிலேயர்கள் அந்த இடத்திலுள்ள கோயிலை கண்டிப்பாக இடித்துவிடப் போவதாகக் கூறி அதனைப் பற்றி மேற்கொண்டு பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டனர். இதனால் மிகுந்த மன வருத்தமுற்ற அவர்கள் எப்படியாவது கோயில்களை மீட்டெடுக்க விழைந்தனர்.

அப்பொழுது அவர்களுக்கு தோன்றிய ஒரு எண்ணமானது தான் இப்பொழுது அடியேன் சொல்லப்போவது. மணலியார் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதன் படி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள அக் கோயில்களை , அதன் தூண்கள், மண்டபங்கள் உட்பட அனைத்தையும் , அப்படியே பெயர்த்து எடுத்துவந்து அவர்கள் செலவிலேயே வெறொரு இடத்திலே அதன் கட்டுமானம் கடற்கரை அருகிலே எப்படி இருந்ததோ, அப்படியே கட்டுவது என்பதுதான் அந்த முடிவு. இதனை ஆங்கிலேயர்களிடம் சொல்லவும் அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்தனர். மிகுந்த மன மகிழ்ச்சியுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்தான் சென்னையில் சைனா பஜார் என்றும், பூக்கடை என்றும் இப்பொழுது அழைக்கப்படும் இடம்.

பூக்கடைப் பகுதியிலே இப்பொழுது இருக்கும் கோயில்கள்தான் மணலி குடும்பத்தாரால் மிகவும் சிரத்தையுடன் , கடற்கரையிலே அமைந்திருந்த வடிவமைப்பு சிறிதும் மாறாமல் அப்படியே சிறந்த பொலிவுடன் கட்டப்பட்டு இன்று சென்னை வாழ் மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கேஸவப் பெருமாள் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கேஸவப் பெருமாள் கோயிலும், அதனை ஒட்டி அமைந்துள்ள ஸ்ரீ மல்லிகேஸ்வரர் அருள்பாலிக்கும் ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோயிலும்.

திருக்கோயிலின் வெளிப் பகுதி
 

மேற்படி கோயில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் தடைபெறக்கூடாது என்பதற்காக கோயிலின் ப்ரதான பெருமாளும், உற்சவ மூர்த்தியுமான  ஸ்ரீ கேஸவப் பெருமாளை திருநீர்மலையில் உள்ள  ஸ்ரீ ரங்கனாதர் / ஸ்ரீ. நீர்வண்ணப்  பெருமாள் கோயிலில் எழுந்தருளப் 
பண்ணியிருந்தனர் என்று ஒரு செவி வழிச் செய்தியும் உண்டு. இதனைப் பற்றி பின்னர் குறிப்பிடுகின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருந் திரளான அளவில் பக்தர்கள் கூடும் கோயிலாக இருந்தது இத் திருக்கோயில். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் குறைந்துவிட்டது.  அக் கோயிலின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட அடியேனைப் போன்ற பலரை மன வருத்தம் அடையச் செய்யும் செய்தி இது. இதற்குக் காரணமும் உள்ளது. ஒரு காலத்தில் இக்கோயிலைச் சுற்றியுள்ள பல வீதிகள் குடியிருப்புப் பகுதிகளாக இருந்தது. எனவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டமும் கணக்கிலடங்கா. இன்றோ பெரும் வணிகத் தலமாக மாறிவிட்ட இப்பகுதிகள் மிகுந்த விலையேற்றம் கொண்டதாகிவிட்டன. இங்கு குடியிருந்தோரும் தங்கள் இல்லங்களை பெரும் விலைக்கு விற்றுவிட்டு , சென்னையின் புறநகர் பகுதிகளுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ சென்று விட்டனர். மேலும் இட நெரிசல், வாஹன நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறு காரணமாகவும் இப்பகுதியிலிருந்து பலர் வெளியேறிவிட்டனர்.

இன்று இக்கோயிலுக்கு முன்பு பலர் தங்கள் வாஹனங்களை நிறுத்திவைத்து கோவிலுக்கு வரும் குறைந்த அளவு பக்தர்களைக் கூட, சுலபமாக கோயிலுக்குள் நுழைய முடியாத அளவுக்கு இடையூறு செய்துகொண்டிருக்கின்றனர். பெருமாள் புறப்பாடு கண்டருளுவது கூட சிரமமாக உள்ளது. கோயிலின் அறங்காவலாராக மணலி குடும்பத்தார் இன்றைக்கும் இருந்தாலும் இக் கோயில்கள் இந்து அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதற்கு தகுந்த நிவாரனத்தை அறநிலையத் துறையினர் எடுக்கவும் இல்லை, அதைப் பற்றி சிந்திப்பதகாக் கூட தெரியவில்லை.

இனி இக்கோயிலின் சிறப்புகள் பற்றி :-

இத்திருக்கோயிலில் ஸ்ரீ கேஸவப் பெருமாள், ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் தவிர   ஸ்ரீ ராமர் ,  ஸ்ரீ கண்ணன்,  ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ.ஆஞ்சநேயர்  இவர்களுக்கு  தனித் தனி ஸன்னதிகள் உள்ளன. மேலும்  ஆழ்வார்கள் பதின்மருக்கும் , பல ஆச்சாரியர்களுக்கும் ஸன்னதிகள் அமைந்துள்ளன.  ஓவ்வொரு  ஸன்னதியிலும் மூன்று ஆழ்வார்கள் ஏள்ளியிருப்பர். கோயிலின் கோபுர வாசலுக்கு வெளிப்புறம் வாஹன மண்டபத்தில் எம்பார் ஸன்னதி உள்ளது.

பல பெரும் உபயதாரர்களைக் கொண்டு இக் கோயிலின் உற்சவங்கள் இன்றும் சிறப்புற நடந்து கொண்டுதானிருக்கிறது. உற்சவங்களுக்கு ஒறு குறையுமில்லாமல் எம்பெருமான் எப்படியாவது அதனை நிர்வகித்துக் கொண்டுவிடுகிறார். இத் திருக்கோயிலில் நடைபெரும் முக்கிய உற்சவங்கள் :-

சித்திரை மாதம் ப்ரம்மோற்சவம்

வைகாசி மாதம் வசந்த உற்சவம்

ஆனி மாதம் பத்து நாள்கள் ஸ்ரீ பெரியாழ்வார் உற்சவம்

ஆடி மாதம் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம்

ஆவணி மாதம் பவித்திர உற்சவம்

புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது தாயார் உற்சவம்

மார்கழி மாதம் திருவத்யயன உற்சவம்

தை மாதம் ஆண்டாள் நீராட்ட உற்சவம்

பங்குனி மாதம் ஸ்ரீ ராமர் உற்சவம்.

மேலும் ஆழ்வார், ஆச்சாரியர்கள் வருஷ திருநக்ஷத்திரங்கள்

இவ்வளவு சிறப்பாக நடைபெறும் உற்சவங்களுக்கு மகுடம் வைத்தாற்போல் அமைந்து மேலும் சிறப்பாக நடைபெறும் உற்சவங்கள் வைகுண்ட ஏகாதசி மற்றும் கூடாரைவல்லி உற்சவங்கள். கூடாரைவல்லி அன்று மாலை சுமார் ஐந்து மணி அளவில் கோஷ்டி ஆகி, பெருமாள் அமுது செய்த பிரசாரதம் விநியோகிக்கப்படும். கூடாரைவல்லி என்றாலே சர்க்கரைப் பொங்கல் தானே முக்கியமான பிரசாதம் ? வேறு எந்தக் திருக்கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு அன்று பிரசாத விநியோகிக்கப்படும். அடியேன் சொல்லும் விஷயம் சுமார் 20 ஆண்டுகளுக்கும் முன்பானது. அப்பொழுதெல்லாம்  20 தளிகைகளுக்கும் மேல் சர்க்கரைப் பொங்கல் விநியோகம் நடைபெறும். (ஒரு தளிகை என்பது இரண்டு படி அரிசி மற்றும் அதற்கு ஈடான வகையில் பருப்பு , வெல்லம் , முந்திரி மற்றும் நெய் ). சுமார் 2000 பேர்களுக்கு மேல் விநியோகம் நடக்கும்.

அதுபோல்தான் வைகுண்ட ஏகாதசி அன்று, சுமார் மூன்றாயிரம் தோசைகள் பெருமாள் அமுது செய்த பிறகு, வரும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த இரண்டு உறசவங்கள் நடைபெறும் நாள்களில் பெரும் திரளான பக்தர்கள் கூடுவர்.


கருட வாஹனத்தில் ஸ்ரீ.கேஸவப் பெருமாள்.
 


ஸ்ரீ.கேசவப் பெருமாள் - நாச்சியார் திருக்கோலம்.




அந்தக் காலங்களில் சென்னையின் மிகப் பிரசித்தி பெற்ற கோயிலாக இத் திருக்கோயிலைப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா ? அக் காலத்திய மிகப் பெரும் உபன்யாசகர்களாக இருந்த ஸ்ரீமான்கள்.
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியர் ஸ்வாமி, காரப்பங்காடு வேங்கடாச்சாரியர் ஸ்வாமி, வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி, பிள்ளைலோகம் ஸ்ரீ.பாஷ்யகாரர் ஸ்வாமி மற்றும் பல வித்வான்கள் இத்திருக்கோயிலில் உபன்யாசங்கள் பலமுறை நிகழ்த்தி இருக்கின்றனர். இத் திருக்கோயிலிலே உபன்யாசங்கள் செய்வதை இவர்கள் அனைவரும் பெரும் பாக்கியமாகவே கருதினார்கள். இவர்களில் பலர் சென்னை வரும் பொழுது இவர்கள்,   எம்பெருமான் அமுது செய்த பிரசாதங்களையே விரும்பி உண்ணுவர். இத் திருக்கோயிலில் அக் காலங்களில் தினமும் ஸ்ரீ.வைஷ்ணவர்களுக்கு  ததியாராதனம் உண்டு. இதனைத் தவிர வெளி ஊர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு மதிய வேளையில் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வந்தன. பெருமாள் ஸேவைக்காக மட்டுமின்றி சென்னைக்கு அலுவல் காரணமாக வரும் பலரும் இக் கோயிலுக்கு மதியம் அளவில் தவறாமல் வந்துவிடுவர் - காரணம் இங்கு நிச்சயமாக தங்கள் பசிக்கு ஏதாவது அன்னம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதனால்தான் ஸ்ரீ.சென்னை கேஸவப் பெருமாள் கோயில் ஸ்ரீ.அன்ன கேஸவப் பெருமாள் கோயில் என்று பக்தர்களால் அழைக்கப் பெற்றதானது.

ஸ்ரீ.கேஸவப் பெருமாளுக்கு சித்திரை மாதம் நடக்கும் ப்ரம்மோற்சவத்தின் பொழுது , பெருமாள் இரண்டு வேளையும் புறப்பாடு கண்டருளுவார்.  பல வாஹனங்கள் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் ஆனது . முதல் நாள் உற்சவத்தின் புன்னைமர
வாஹனம் முதற்கொண்டு கருட வாஹனம், சிம்ம வாஹனம், சேஷ வாஹனம், யானை வாஹனம், ஹனுமந்த வாஹனம் உட்பட பல வாஹனங்கள் இத் திருக் கோயிலில் உள்ளன. கோயிலுக்கு வெளியே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை ஒட்டி தேரடி தெருவில் நுழைவில் தேர் நிலை உள்ளது. தேர் வடம் பிடிப்பதெற்கென்றே, மணலியார் குடும்பத்தில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கானவர்கள் தேர் உற்சவத்தன்று வருவார்கள்.

இங்கு நடைபெரும் ஆழ்வார்களுக்கான உற்சவங்களில் பெரியாழ்வாருக்கு ஆனி மாதம் நடைபெரும் பெரியாழ்வார் உற்சவம் மிகவும் சிறப்பாக இருக்கும். இதற்கெனவே தனியாக ஒரு ட்ரஸ்ட் அந்தக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு, தினசரி உற்சவங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் உற்சவம் தொடங்கி ஒன்பதாம் நாள் உற்சவம் முடிய பெரியாழ்வார் தினசரி கோயில் உள் புறப்பாடு கணடருளி ஒய்யாளி, பத்தி உலாத்தல் நடத்தி ஆழ்வார் ஸன்னதிக்கு எழுந்தருளுவார். பத்தாம் நாள் சாற்றுமுறையன்று ஸ்ரீ.கேஸவப் பெருமாளுடன், பெரியாழ்வாரும் வெளி வீதி புறப்பாடு கண்டருளுவர். அன்று  மட்டும் பெருமாளுக்கு ஒய்யாளி மற்றும் பத்தி உலாத்தல் நடைபெரும். இரவு வெளி வீதி புறப்பாடு கண்டருளி ஸன்னதிக்கு வந்த பிறகு பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி தொடங்கும். விடிய விடிய நடக்கும் கோஷ்டி மறுநாள் காலை சுமார் 7.00 மணியளவில்
தான் சாற்றுமுறையுடன் முடியும்.

பெரியாழ்வார் உற்சவத்திற்கென்றே புகழ் பெற்ற தஞ்சாவூர் நாதஸ்வர வித்வான்கள் வரவழைக்கப்படுவார்கள். பத்தாம் நாளன்று ஒய்யாளி ஆரம்பிப்பதற்கு முன்பு அந்த நாதஸ்வர வித்வான்களுக்கு பல விதமான பிரசாதங்களும், தங்கத்தால் ஆன  பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். இதனைத் தவிர நல்ல பல சம்பாவனைகள்
வழங்கப்படும். இந்த உற்சவங்களுக்கு ஸேவார்த்திகள் பெருமளவில் கூடுவர்.

ஸ்ரீ.கேசவப் பெருமாளுக்கு திரு அத்யயன உற்சவம் 21 நாள்கள் மிகச் சிறப்பாக நடைபெரும். பகல் பத்து உற்சவத்தின் போது கோயிலுக்குள் உள் புறப்பாடும், இராப்பத்து உற்சவத்தின் போது வெளி வீதி புறப்பாடும் நடக்கும். இராப்பத்து சாற்றுமுறையன்று இரவு , கேஸவப் பெருமாள் கருட வாஹனத்திலும், நம்மாழ்வார் யானை வாஹனத்திலும் வெளி வீதி புறப்பாடு கண்டருளுவர். இப்படியாக மேலே குறிப்பிட்ட பல எம்பெருமான்களுக்கும் உற்சவங்கள் அருமையாக நடக்கும்.

இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ.செங்கமல வல்லித் தாயார் புன்னகை தவழும் திருமுகத்துடன் மிகவும் வாத்ஸல்யமாக அடியார்களுக்கு ஸேவை ஸாதிக்கிறார். அவர் திருமேனி அழகு சொல்லி மாளாது.
நவராத்திரியின் பொழுது தாயாருக்கு ஒண்பது நாள்கள் தனி உற்சவம் நடைபெரும்.


ஸ்ரீ.செங்கமலவல்லித் தாயாருடன் ஸ்ரீ.கேஸவப் பெருமாள்.


தாயார் ஸன்னதியை ஒட்டி அவருக்கு வலப்புறம் ஸ்ரீ.ராமர் ஸன்னதி உள்ளது. ஸ்ரீ.ராமநவமி உற்சவம் பத்து நாள்கள் மிகச் சிறப்பாக நடக்கும்.

ஸ்ரீ.ஆண்டாள் ஸன்னதி, ஸ்ரீ.கண்ணன் ஸன்னதி கோயிலின் இடது புறம் சொர்க்கவாசலை ஒட்டி உள்ளது. ஆண்டாள் நீராட்ட உற்சவம் மார்கழி மாதமும், திருவாடிப் பூர உற்சவம் ஆடி மாதமும் ஒன்பது நாள்கள் நடைபெரும்.

அது போலவே இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ.சக்கரத்தாழ்வாரும். அவருக்கு தனியாக அமைந்துள்ள ஸன்னதி, பக்தர்கள் ப்ரதிக்ஷணம் செய்வதற்கு வசதியாக நான்கு பக்கங்களிலும் வழி அமைக்கப்பட்டு உள்ளது. பெரும் வரப் பிரசாதி. அவரின் அடி பணிந்து, அவரை ஒவ்வொரு சனிக் கிழமை அன்றும் ப்ரதிக்ஷணம் செய்யும் பக்தர்கள் இன்றும் பலர் உண்டு. சில ஆண்டுகள் முன்பு வரை ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று , மிகக் கோலாகலமாக , ஆண்டாள் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ள நீண்ட மண்டபத்தில் சக்கரத்தாழ்வாரை எழுந்தருளப் பண்ணி , ஸ்ரீ சுதர்ஸன ஹோமம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஸ்ரீ.சக்கரத்தாழ்வார் ஸன்னதியை அடுத்து ஸ்ரீ.ஆஞ்சனேயருக்கும் தனி ஸன்னதி உள்ளது. அவர் ஸன்னதியானது ஸ்ரீ.ராமர் ஸன்னதியை நோக்கி கைகூப்பிக் கொண்டு நின்றவண்ணம் இருக்கும்படி அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் அடியேன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சுமார்
99 ஆண்டுகளுக்கும் மேலாக  கைங்கர்யங்கள் செய்து வந்தனர். அடியேன் தாய் வழிப் பாட்டனாரான ஸ்ரீ.ஸ்ரீராமன் ஐயங்காரும், பிறகு அடியேன் தந்தையார். ஸ்ரீ.விஜயராகாவாச்சாரியாரும், அவருடனும், அவர் பரமபதித்த பிறகும் அடியேன் மூத்த சகோதரரான ஸ்ரீ. கேஸவ ஐயங்காரும் ( அவர் கடந்த ஆண்டு பரமபதித்துவிட்டார்) புருஷாகாரி கைங்கர்யங்கள் செய்து வந்தனர் என்பது அடியோங்கள் குடும்பத்தினர்  அனைவருக்கும் மகிழ்ச்சியே. அடியேன் தமையனார் பரமபதித்த பிறகு கைங்கர்ய தொடர்புகள் நின்றுவிட்டாலும், அடியோங்கள் குடும்பங்களை பல பல ஆண்டுகளாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் இப்பெருமாள் அடியோங்களின் மனங்களில் என்றும் நிறைந்து இருப்பார்.

இத்திருக்கோயில் அன்ன கேஸவன் கோயில் என்று அழைக்கப் பெற்றதற்கு மேலும் ஒரு காரணம், இங்கு பெருமாள் அமுது செய்ய தயாராகும் பிரஸாதங்கள். ஆம். ஒவ்வொரு பிரசாதமும் மிக்க சுவையுடன் அருமையாக இருக்கும். இத் திருக்கோயில் மடப்பள்ளி கைங்கர்யம் கும்பகோணம் ஸ்ரீ.சேஷாத்திரி ஸ்வாமிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரது கைவண்ணம் பிரசாதங்களின் சுவையில் மணக்கும். ஸேவார்த்திகள் , பக்தர்கள் அனைவருக்கும் கை நிறைய பிரசாதங்கள் வழங்கப் படும். ஒரு காலத்தில் முன்னாள் முதலமைச்சரும், இத்திருக்கோயில் அறங்காவலராக இருந்த மணலி ஸ்ரீ.ராமகிருஷ்ண முதலியாரின் அத்யந்த நண்பருமான ஸ்ரீ. பக்தவச்சலம் அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இத் திருக்கோயிலுக்கு வருவார். பெருமாள் மீது ஈடுபாடும் , இக் கோயில் பிரசாதங்களின் மேல் மிக்க விருப்பமும் கொண்டிருந்தார். இவர் வர முடியாத வாரங்களில் , பிரசாதங்களை எடுத்துக் கொண்டு அவர் வீட்டில் கொடுத்துவிட்டு வருவர் இக் கோயில் ஊழியர்கள்.


இத் திருக்கோயிலைப் பற்றி குறிப்பிடும் போது மிக முக்கியமாகச் சொல்லப்பட வேண்டியவர் இங்கு அர்ச்சகராக கைங்கர்யம் செய்து வந்த ஸ்ரீ.சந்தான பட்டர் ஸ்வாமிகள். அவர் பெருமாளுக்கு சாற்றும் , சாற்றுப்படிகள் அனைத்தும் அவ்வளவு அழகாக இருக்கும். ஒரு பென்சிலையும், ஒரு வெள்ளைத் தாளையும் இவரிடம் கொடுத்தால், அப்படியே , எம்பெருமானையும், தாயாரையும் வைத்த கை எடுக்காமல் சித்திரம் தீட்டி கொடுத்துவிடுவார். யாக சாலை விற்பன்னர். முக்கியமாக ஸ்ரீ.சுதர்ஸன ஹோமம் செய்வதில் புலமை பெற்றவர். சுமார் 85 ஆண்டுகள் வரை இக் கோயிலில் அர்ச்சகக் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஸ்வாமி , பரமபதித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது.


ஸ்ரீ.சந்தான பட்டர் சதாபிஷேகத்தின் போது அவருடன் கூட ஸ்ரீ.பார்த்தசாரதி திருக்கோயில் ஸ்ரீ.வேங்கடகிருஷ்ணன் பட்டர்,

ஸ்ரீ.சந்தான பட்டர்
 

அன்றைய காலகட்டங்களிலே பெருமாள் புறப்பாடு கண்டருளும் வீதிகள் நிறைய. அவை தேவராஜ முதலித் தெரு, ராசப்பச் செட்டி தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு, நாராயண முதலி தெரு, காசி செட்டி தெரு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை என்று. ஆனால் இன்றைய நாள்களில் நாராயண
முதலித் தெரு, காசி செட்டி தெரு, கோவிந்தப்ப நாயக்கன்
தெருக்களில் நுழைவதே கடினம். இத் தெருக்களில் மக்கள் கூட்டமும், வணிகத்திற்காக வரும் ஊர்திகள் உட்பட பல இடைஞ்சல்களால் சாதாரணமாக நடந்து செல்வதே மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே பெருமாள் இவ்வீதிகளில் புறப்பாடு கண்டருளுவதில்லை என்றே நினைக்கிறேன்.

இத்திருக்கோயிலானது சென்னையின் முக்கிய கேந்திரமான, பாரி முனைக்கு அருகில், பூக்கடை காவல் நிலையத்திற்கு அருகாமையில், தேவராஜ முதலித் தெருவில் உள்ளது.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் தவறாமல் இத்திருக்கோயில் எம்பெருமான்களை ஸேவித்து ஸ்ரீ.கேஸவப் பெருமாளின் அனுக்ரஹத்தைப் பெற வேண்டுகிறோம்.

இத்திருக்கோயிலைப் பற்றி குறிப்பிடும் பொழுது , இக் கோயிலின் அறங்காவலர்களாக இருக்கும் மணலி குடும்பத்தாரைப் பற்றி ஒரு செய்தி. ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர்கள் பல நற்காரியங்கள் செய்வதிலும் நல்ல மனம் கொண்டவர்கள். சென்னை கிண்டியில் ஒரு பெரிய இடத்தில் நல்ல வசதிகளுடன், ஏழை மாணவர்கள் தங்கி படிப்பதற்காக  இலவசமாக இடம் கொடுத்து உதவி செய்கின்றனர். இது இவர்கள் நடத்தும் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

ஸ்ரீ.செங்கமலவல்லி ஸமேத ஸ்ரீ.கேஸவப் பெருமாள் திருவடிகளே
சரணம்.













 

Tuesday, February 24, 2015

திருக்கண்ணன்குடியும் திருமங்கை ஆழ்வாரும்

திருக்கண்ணன்குடியும் திருமங்கை ஆழ்வாரும்.

திருக்கண்ணங்குடி திவ்ய தேஸம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாஸாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தேஸமாகும். பெரிய திருமொழி ஒன்பதாம் பத்தின் முதல் திருமொழியாகிய " வங்கமா முந்நீர், வரி நிறப் பெரிய " என்று தொடங்கும் பாசுரத்துடன் மொத்தம் பத்து பாசுரங்கள். இங்கு ஸேவை ஸாதிக்கும் எம்பெருமான் திருநாமம் தாமோதர நாராயணன். தாயார் அரவிந்தவல்லி மற்றும் லோகநாயகி தாயார் என இரு திருநாமங்கள். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாளை " சாமமா மேனி என் தலைவன் " என்றும், " திருக்கண்ணங்குடியுள் நின்றானே " என்றும் ஆழ்வார் திருவாக்கால் அருளுகின்றார்.


தாமோதர நாராயணப் பெருமாள்
 

அரவிந்த வல்லி, லோகநாயகித் தாயார்.
 












குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கை ஆழ்வார்.
 















திருக்கண்ணங்குடி திருத்தலத்தில், திருமங்கை ஆழ்வார் காலத்தில் நடந்த சில சம்பவங்கள் வெகு முக்கியமானவை. அவற்றுள் நான்கு விஷயங்கள் பிரசித்தம். அவை :-

1) உறங்காப் புளி
2) தோலா (தீரா) வழக்கு
3) ஊறாக் கிணறு.
4) காயா மகிழ்

இந்த நான்கு விஷயங்களுக்கும் காரணம் திருமங்கை ஆழ்வார் தான்.

அதனை பற்றி கீழே பார்ப்போம்.

ஸ்ரீ ரங்கத்தில் பெரிய பெருமாளுக்கு மதிள் கைங்கர்யம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் திருமங்கை ஆழ்வார். ஆனால் அவரால் அந்த கைங்கர்யத்தை முழுவதுமாக நிறைவேற்றக் கூடிய அளவில் பொருள் வசதியோ, பண வசதியோ அவரிடம் பற்றாக்குறையாக இருந்தது. ஆனால் எப்படியும் கைங்கர்யத்தை விரைவில் நிறைவேற்றிட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உறுதியாக இருந்தது. பணமும் , பொருளும் ஈட்டுவது பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தார். அதற்காக அவர் ஈடுபடும் காரியங்கள் - அது சரியோ , சரியில்லையோ எந்த நிலையையும் எடுத்தார். அவருக்கு வேண்டியது கைங்கர்யத்தை நிறைவேற்ற  வேண்டிய பொருளும், பணமும்தான்.

1) உறங்காப் புளி :-

ஒரு சமயம் திருமங்கை ஆழ்வார் மனதிலே ஒரு எண்ணம் உதித்தது. அதாவது நாகப்பட்டினத்திலே, புத்தருக்கு ஒரு ஸ்வர்ண விக்ரஹம் இருந்தது. அது 200 / 300 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது. அதனைக் எடுத்துக் கொண்டு வந்தால், நிச்சயமாக ஸ்ரீரங்கம் மதிள் கைங்கர்யத்தை பெருமளவுக்கு முடித்துவிடலாம் என்று எண்ணி, நாகப்பட்டினம்
சென்றார். அங்கிருந்து  அந்த ஸ்வர்ண விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கி கிளம்பினார்.

பகலில் விலை மதிப்பு மிக்கதான ஸ்வர்ண புத்த விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு சென்றால் பலருக்கும் அந்த விஷயம் தெரிந்து விடும் என்பதால், இரவு நேரத்தில் மட்டும் அந்த விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு பயணப் படலாம் என்றும், அதற்காக எந்த இடத்தில் தங்குவது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயம் திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணன்குடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது மாலை நேரம். எனவே விக்ரஹத்தை அங்கேயே பாதுகாப்பான ஒரு இடத்தில் புதைத்து வைக்கலாம் என முடிவெடுத்தார். 

திருமங்கை ஆழ்வாரின் எண்ணமானது அன்று இரவு , திருக்கண்ணன்குடியில் தங்கிவிட்டு, மறுநாள் காலைப் பொழுதையும் அங்கேயே கழித்துவிட்டு , அன்று இரவு அங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கம் செல்லலாம் என்று இருந்தது.
எனவே திருக்கண்ணன்குடியில் எந்த இடத்தில் புதைத்து வைக்கலாம் என்று அங்கு உள்ள பல இடங்களை பார்த்துக் கொண்டே வந்தார். அப்பொழுது அவர் கண்ணில் ஒரு வயல் வெளி தென்பட்டது. மனிதர்கள் நடமாட்டமில்லாத அந்த இடம்தான் சரியானது என்று அந்த வயலுக்குள் ஒரு இடத்தில் புத்த விக்ரஹத்தை புதைத்தார். அதனை அங்கு புதைத்து வைத்திருப்பதற்கு சாட்சியாக, அருகிலிருந்த ஒரு புளிய மரத்தை நோக்கி, அம் மரம் தான் , தான் அங்கு புதைத்து வைத்திருக்கும் விக்ரஹத்திற்கு சாட்சி என்றும், மேலும் தான் உறங்கும் நேரத்தில், அதனை காவல் காக்கவும் வேண்டினார். புளிய மரமும் சலசலத்து, தன் இலைகளை உதிர்த்து, அதன் வாயிலாக அவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பதாக ஒப்புக் கொண்டது. திருமங்கை ஆழ்வார் களைப்பின் காரணமாக உடனே உறங்கிவிடுகிறார். ஆழ்வார் உறக்கத்தில் இருக்கும் பொழுது, அந்த புளிய மரம் கண் கொட்டாமல் அவர் புதைத்து வைத்திருந்த ஸ்வர்ண விக்ரஹத்தை கண்ணும், கருத்துமாக பாதுகாத்து வந்தது.

இப்படி உறங்காமல் விழித்திருந்து, காவலாகவும், சாட்சியாகவும் இருந்த காரணத்தால் , அப் புளிய மரம்  " உறங்காப் புளி " என்று அழைக்கப் பெற்றது.  அம்மரத்தை திருக்கண்ணன்குடியில் தரிசிக்கலாம்.


2) தோலா ( தீரா ) வழக்கு :-

மறுநாள் காலை பொழுது விடிகிறது. அப்பொழுது அந்த வயலுக்குச் சொந்தக்காரனான ஒரு உழவன் அங்கு உழவு வேலை பார்ப்பதற்காக வருகிறான். இதனைக் கண்ட அந்த புளிய மரம்,  திருமங்கை ஆழ்வாரின் மீது தன் இலைகளை பொழியச் செய்து அவரை எழுப்பி விடுகிறது. உறக்கத்தில் இருந்து எழுந்த அவர், அங்கு வயலில் இறங்க இருந்த அந்த உழவனை தடுத்தார். உழவன் ஆழ்வாரிடம் அந்த வயல் தன்னுடையது என்றும் அங்கு உழவிட
வந்திருப்பதாகவும் சொல்ல, ஆழ்வாரோ அந்த வயல் தனக்குத் தான் சொந்தம் என்றும் எனவே அவ்வயலில் அவன் இறங்கக் கூடாது என்று சொல்லி தடுத்தார்.

உழவனோ, வயல் தனக்குச் சொந்தம் என்பதற்கு   ஆதாரமாக தன்னிடம் வேண்டிய அளவு பத்திரங்கள்  இருப்பதாகக் கூற, ஆனால் ஆழ்வாரோ வயல் தன்னுடையது என்று அவனிடம் வாதிட்டார்.
உழவன் எவ்வளவு சொல்லியும் அதனை ஆழ்வார் ஒப்புக்கொள்ளாமல் , அவனை வயலில் இறங்க அனுமதிக்கவில்லை. பிறகு உழவன் வேறு வழியின்றி, அவ்வூர் சபையாரிடம் சென்று தன் வயல் பற்றிய வழக்கை முறையிட்டான். அவர்களும் திருமங்கை ஆழ்வாரை அழைத்து அது பற்றி விசாரிக்க, அவரும் அந்த வயல் தனக்குத்தான் சொந்தமென்றும், அதற்குண்டான ஆவணங்கள், ஸ்ரீரங்கத்தில் இருப்பதாகவும் சொல்லி, அதனைக் கொண்டு வந்து காண்பிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
சபையினரும் அவர் வேண்டுகோளுக்கு ஒப்புக் கொண்டு, விரைவில் ஆவணங்களை கொண்டு வந்து காண்பிக்குமாறு ஆனையிட்டனர். அன்று இரவே ஆழ்வார், யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வயலில் புதைத்து வைத்திருந்த அந்த புத்த ஸ்வர்ண விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சென்றவர் சென்றவர்தான். பிறகு அங்கு திரும்பி வரவே இல்லை. அதனால் உழவன் முறையிட்ட வழக்கு இன்று வரை தீர்க்கப்படவே இல்லை.

இப்படியாக இதுவரை தீர்க்கபபடாமல் இருக்கும் இவ் வழக்கு "தீரா வழக்கான " கதையானது. அதன் காரணமாக திருக்கண்ணங்குடியில் நடக்கும் வழக்குகள் எதுவுமே தீர்க்கப்பட முடியாமல் இருப்பதாக வேடிக்கையாக பெரியோர் கூறுவர்.

3) ஊறாக் கிணறு :-

மேற்சொன்ன வழக்கு வாதம் நடந்து கொண்டிருக்கும் பொழுது திருமங்கை ஆழ்வாருக்கு தீர்த்த தாகம் எடுத்தது. அப்பொழுது அருகில் கிணற்றில் , நீர் எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் , தனக்கு தாகம் தீர்க்க, தண்ணீர் தருமாறு கேட்டார். அந்தப் பெண்ணோ, இவர் தனக்குச் சொந்தமில்லாத வயலையே தன்னுடையது என்று தர்க்கம் செய்தவர். இவருக்குத் தண்ணீர் கொடுத்தால் அந்த கிணறையும், குடத்தையும் தன்னுடையது என்று ஏன் சொல்ல மாட்டார் என்று பயந்து, அவருக்கு தண்ணீர் தர மறுத்தார். மிகுந்த தாகத்தில் இருந்த திருமங்கை ஆழ்வார், கோபம் கொண்டு,அவ்வூர் கிணறுகள் எதிலும் நல்ல தண்ணீர் ஊறாது என்று சாபமிட்டார். இதன் காரணமாக திருக்கண்ணங்குடியில், வீடுகளில் உள்ள கிணறுகளில் நல்ல தண்ணீர் ஊறுவதில்லை. அவ்வூர் மக்கள் திருக்கோயில் குளத்தில் இருந்து
தண்ணீர் எடுத்து உபயோகித்து வருகின்றனர். ஆனால் ஒரு ஆச்சரியம். கோயில் குளம், மற்றும்
கோயிலுக்குள் உள்ள கிணற்றில் மட்டும் தண்ணீர் ஊற்றெடுக்கும்.   

இப்படியாக அவ்வூரில் உள்ள  கிணறுகளுக்கு
" ஊறாக் கிணறு " என்று பெயர் நிலைத்துவிட்டது.


4)  காயா மகிழ் :-

மிகுந்த தாகத்தில் இருந்த திருமங்கை ஆழ்வார் , களைப்புற்று, உணவு ஏதும் சாப்பிடாமல் அப்படியே அங்கிருந்த ஒரு மகிழ மரத்தின் அடியில் உறங்கிவிட்டார். திருமங்கை ஆழ்வார் மேல், பாசம் கொண்ட லோகநாயகித் தாயார், ஆழ்வார் உறக்கத்தில் இருக்கும் பொழுதே, அவருக்கு உணவு அளித்து அவர் பசியையும், களைப்பையும் போக்கினார். உணவை உட்கொண்ட பிறகு விழித்தெழுந்த ஆழ்வார் தனக்கு உணவளித்தது , தான் படுத்திருந்த மகிழ மரம்தான் என்று எண்ணி, அம்மரத்தை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.
பின்னர்தான் அவருக்குத் தெரிந்தது தனக்கு உணவளித்தது தாயார்தான் என்று. இதனால் மேலும் மகிழ்வுற்ற திருமங்கை ஆழ்வார் அம்மரத்தின் பூக்கள் என்றும் நல்ல மணம் தரும் பூக்களை உடையதாக இருக்கட்டும் என்று வாழ்த்தினார்.

அதன் காரணமாகத்தான் மகிழம் பூக்கள் வாடி விட்டாலும் அதன் மணத்தை இழப்பதில்லை.
மகிழ மரத்தின் பூக்களுக்கு " காயா மகிழ் " என்ற பெயர் நிலை பெற்றது.

திருக்கண்ணங்குடி  கோபுர தரிசனம்






மகிழ மரம்


முக்கிய குறிப்பு : மேற்படியான தகவல்கள் அடியோங்கள் திரட்டியது வேளுக்குடி ஸ்ரீ. கிருஷ்ணன் ஸ்வாமி, மற்றும் தென்திருப்பேரை ஸ்ரீ.அரவிந்தலோசனன் ஸ்வாமி அவர்களின் உபன்யாசங்களிலிருந்து. மேலும் புகைப்படங்கள்
" P Base.com " இல் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. புகைப்படங்கள் 2006 ஆம் ஆண்டு வானமாமலை ஸ்ரீ.பத்மநாபன் ஸ்வாமி அவர்கள் மின்னஞ்சலில் பதிவிட்டது.

இவர்கள் அனைவருக்கும் அடியோங்கள் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் - தாஸன் என்.வி.ராகவன் மற்றும் சந்திரா ராகவன்.

  
















 

Tuesday, February 3, 2015

திருமழிசை ஆழ்வார் வைபவம்

திருமழிசை ஆழ்வார் பற்றி அடியேன் மனைவி ஸ்ரீமதி.சந்திரா ராகவன் அவர்கள் தொகுத்துக் கொடுத்த பல குறிப்புகளுடன் அடியேனின் சிற்றறிவுக்கு கிட்டி, நினைவில் பதிந்திருந்த சில குறிப்புக்களையும்  இங்கே பகிர்ந்து கொள்கிறேன். வார்த்தைகளிலும், தகவல்களிலும் தவறிருந்தால் அடியோங்களை க்ஷமிக்க வேண்டுகிறோம்.


( புகைப்படம் உதவி - அந்தர்யாமி.நெட் )



திருமழிசையிலே, பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்ற அம்மையாருக்கும் , திருமகனாக , தை மாதம் மகம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்  பார்க்கவர் என்னும் பெயர் உடைய திருமழிசை ஆழ்வார்.இவர் பிறந்த பொழுது , இவரின் திரு உடம்பில் அவயவங்கள் இன்றி வெரும் பிண்டமாகப் பிறந்தார். எனவே இவரது பெற்றோர்கள் இவரை அவ்வூரிலே ஒரு வேலி ஓரமாகக் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டனர்.

எம்பெருமானின் கருணை கடாக்ஷத்தினால் இவருக்கு கைகள், கால்கள் மற்றும் எல்லா உறுப்புகளும் கிடைக்கப் பெற்றன. இப்படி முழு உருவம் பெற்று ஒரு அழகான குழந்தையாக எம்பெருமானால் மாற்றப்பட்ட இவர், யாரும் இல்லாத நிலையில் அந்த வேலியின் அருகில் கிடந்த நிலையில் அழுது கொண்டு இருந்தார். அப்பொழுது, அப்பக்கமாக வந்த பாணர்குலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், குழந்தையின் அழுகுரல் கேட்டு , அக் குழந்தையை சேர்ந்தவர்கள் அங்கு அருகில் இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்து , ஒருவரும் இல்லாத பக்ஷத்தில் அக் குழந்தையை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அத்தம்பதியினர் குழந்தை பாக்கியம் அற்றவர்கள். எனவே வீதியின் ஓரத்தில் ஆதரவின்றி கிடக்கும் அக்குழந்தையை, தங்களுக்கு பகவான் அருளியதாக எண்ணி , மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லம் எடுத்துச் சென்றனர்.

இப்படியாக அப்பாணர் குலத்திலே வளர ஆரம்பித்த பார்க்கவர், தனக்கு உணவாக பாலைக் கூட பருகாமல், நன்கு வளர்ந்து வந்தார். இப்படி எந்த உணவும் உண்ணாமல் வளர்ந்து வந்த இந்த அதிசயக் குழந்தையைப் பார்த்து அவ்வூர் மக்கள் மிகுந்த அதிசயப்பட்டனர். பால் முதலான திரவ உணவுகளைக் கூட பருகாமல் வளர்ந்து வரும் குழந்தையை நினைத்து, பாணர்குல தம்பதியினர் மிக்க வருத்தமடைந்தனர்.


ஒரு வயோதிகத் தம்பதியினர், பாலைக் கூட பருகாமல் வளர்ந்து வரும் , குழந்தையைக் காண  வந்தனர். அப்பொழுது தங்களுடன் நன்கு காய்ச்சிய பாலை, குழந்தைக்குக் கொடுத்துப் பார்க்கலாம் என்று கொண்டுவந்தனர். என்ன அதிசயம். அவர்கள் கொடுத்த பாலை குழந்தை நன்றாகப் பருகியது. அது முதற்கொண்டு தினமும் அத்தம்பதியினர் குழந்தைக்குத் தாங்களாகவே பாலைக் கொண்டுவந்து கொடுத்து, பருக வைத்தனர்.

பின்னர் ஒரு நாள், குழந்தை குடித்தது போக மீதம் வைத்து இருந்த பாலை, அவருக்கு தினமும் பாலைக் கொண்டுவரும்  அந்த முதிய தம்பதியினர் பருகினர். வயது முதிர்ந்த அவர்கள் , மிகுந்திருந்த அந்தப் பாலைப் பருகியபொழுது, அவர்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு, திடீரென்று இளமை நிலைக்குத் திரும்பினர். இளமைப் பருவத்தை அடைந்த நிலையில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை கணிகண்ணன் என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்.  கணிகண்ணனும், பார்க்கவருடன் கூட இருந்து, அவர் சிஷ்யராக அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார்.

இப்படியாக வளர்ந்த நிலையில், பார்க்கவர் பல் வேறு சம்பிரதாயங்களில் மாறி, மாறி இருந்து வரலானார். இவரை திருத்தி , ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் , முதலாழ்வார்களில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் விரும்பினார்.  அதற்கான முயற்சியாக , ஒரு சமயம் பார்க்கவர் கண் எதிரில் , பேயாழ்வார் ஒரு சிறிய செடியை கொண்டு வந்து, அதன் இலைப் பகுதி பூமிக்குள்ளும், வேர் பகுதி மேல் நோக்கியும் இருக்கும்படி நட்டார். மேலும் அவர் பார்க்கும் பொழுதே ஒரு அறுந்த கயிரை, ஒரு ஓட்டைப் பாணையில் கட்டி, தண்ணீர் இறைக்கலானார். இதனைக் கண்டு, பேயாழ்வாரிடம் வந்து , ஏன் இப்படி தவறாகச் செய்கின்றீர்கள் என்றும் இதனால் என்ன பயன் என்றும் பார்க்கவர் கேட்டார். அதற்கு பதில் கூறும் விதமாக , தான் செய்வது விழலுக்கு இறைத்த நீர் போன்றதுதான் என்றும் அது போலவே, பார்க்கவரும், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தழுவாமல், பிற மதங்களை சார்ந்து இருப்பதும் என்று கூற, இதனை உணர்ந்து கொண்ட பார்க்கவரும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு மாறினார். பின்னர் திருமழிசை ஆழ்வார் என்று அழைக்கபடலானார்.

வயதான மூதாட்டி ஒருவர், திருமழிசை ஆழ்வாரின் திருமாளிகையிலே தினமும் திருமாளிகையை பெருக்கி சுத்தம் செய்து, வெளியில் கோலமிட்டு கைங்கர்யங்கள் செய்து வந்தார். இவரின் கைங்கர்யங்களைக் கண்டு மகிழ்வுற்ற திருமழிசை ஆழ்வார் , அவரிடம் , அவருக்கு ஏதாவது உதவி செய்வதாகவும் ஆகவே என்ன உதவி வேண்டும் என்றும் கேட்க, அம்மூதாட்டி, தன்னால் இந்த முதுமையைத் தாங்க முடியவில்லை என்றும் அதற்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார். அவருக்கு அவரின் முதுமையை நீக்கி, இளமை பருவத்தை அருளினார். மிக அழகான , வசீகரமான தோற்றமுடையவராகிய 
மாறிய அந்தப் பெண்னை, அப்பொழுது அப்பிரதேஸத்தை ஆண்டு வந்த மன்னன் விரும்பி மணந்து கொண்டான். காலம் செல்லச் செல்ல, அந்தப் பெண் தன் இளமை நிலையிலேயே இருக்க , அந்த அரசன் மட்டும் முதுமை நிலையை அடைந்தான். அவளின் நிரந்தரமான அந்த இளமை நிலைக்கு என்ன காரணம் என்று அவளிடம் கேட்க, அப் பெண்ணும், திருமழிசை ஆழ்வார் தனக்கு அந்த நிலையை அளித்ததாகக் கூறினாள். இதனை தெரிந்து கொண்ட அந்த அரசன் தனக்கும் அவ்வாறான இளமை நிலை வேண்டி, திருமழிசை ஆழ்வாரை அனுக விரும்பி, அவரின் சிஷ்யரான கணிகண்ணனிடம் சென்று, ஆழ்வாரிடம் சொல்லி, தனக்கும் இளமைப் பருவத்தை அளிக்க வேண்டினான். ஆனால் கணிகண்ணனோ அவ்வாறு செய்ய இயலாது என்று கூறி அரசனின் விருப்பத்தை நிராகரித்தார்.

தன்னை இளமை பருவத்திற்கு மாற்ற மறுத்த கணிகண்ணன் மேல் கோபம் கொண்ட அந்த அரசன், கணிகண்ணனை நாடு கடத்த ஆணையிட்டான். இதன் காரணமாக நாட்டை விட்டு கணிகண்ணன் வெளியேற, வருத்தமுற்ற திருமழிசைப் பிரான், நேராக தான் தினமும் ஸேவித்து வரும் திருவெக்கா, யதோத்தகாரி பெருமாளிடம் சென்று, கணிகண்ணன் இல்லாத ஊரில் தான் இருக்க விரும்பவில்லை என்றும், தானும் அவ்வூரை விட்டுச் செல்வதாகவும் , எனவே பெருமாளும் அவ்வூரில் இருக்க வேண்டாம் என்று வேண்டும் விதமாக,

 "கணிகண்ணன் போகின்றான், காமருபூம் கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா, துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றான், நீயும் உந்தன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் "

 என்று பாடி, தன்னுடன்  பெருமாளையும் கிளம்பி வரச் சொன்னார். பெருமாளும் அவரின் வாக்குக்கிணங்கி அவருடன் , காஞ்சி நகரத்தை விட்டு சென்றார். இதனால் செல்வத்தையும்,பொலிவையும் இழந்த அந்த பிரதேஸத்தைக் காண சகிக்காமல் தன்னுடைய தவறை உணர்ந்த அரசன், கணிகண்ணனை மீண்டும் காஞ்சி நகரத்திற்குத் திரும்ப வேண்டினான். கணிகண்ணனும் பக்திசாரரும் மீண்டும் காஞ்சிக்கு திரும்ப, அவர்களுடன் பெருமாளையும் வரச் சொல்லி,

" கணிகண்ணன் போக்கொழிந்தான், காமரு பூம் கச்சி மணிவண்ணா
நீ கிடக்கவேண்டும், துணிவுடைய செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன், நீயும் உந்தன் பைந்நாகப் பாய் படுத்துக் கொள் "

என்று வேண்ட பெருமாளும் , திருமழிசை ஆழ்வார் சொன்னபடியே மீண்டும் வந்து அவர் பைந்நாகப் பாயில் படுத்துக் கொண்டார். ஆனால் திரும்ப படுக்கும் போது திசை மாறி படுத்துக் கொண்டார். திருமழிசைப்பிரான் சொன்ன படி நடந்து கொண்டபடியினாலே, யதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ஆனார். 

சிவன் ,திருமழிசை ஆழ்வாருக்கு, ஸ்ரீமன் நாராயணன் மேல் இருக்கும் பற்றை உலகுக்கு விழைக்க எண்ணம் கொண்டார். அதன் பொருட்டு அவரை சோதிப்பதற்காக , ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் இருந்து அவரை மீண்டும் சைவ சமயத்திற்கு வர சிவன் அழைக்க , அதற்கு மறுத்த திருமழிசை ஆழ்வாருக்கும், சிவனுக்கும் வாக்கு வாதம் முற்ற, அதன் காரணமாக தனது நெற்றிக் கண்ணை திறந்து சிவன் ஆக்ரோஷத்துடன் அவரை எரிக்க முயன்றார். அப்பொழுது, திருமழிசை ஆழ்வார், தனது வலது பாதத்தின் கட்டை விரலில் உள்ள கண்ணை திறக்க, சிவனின் நெற்றிக் கண் ஜ்வாலை தனது வலிமையை இழந்தது. இதனைக் கண்ட சிவன் , திருமழிசை ஆழ்வாரின் ஸ்ரீவஷ்ணவ பக்தியை மெச்சி அவருக்கு பக்திசாரர் என்ற பெயரை அருளினார். இன்றும் இவரின் அவதார ஸ்தலமான திருமழிசையில், ஜெகன்னாதப் பெருமாள் திருக்கோயிலில் , இவரின் வலது கால் கட்டை விரலில் அந்த திருக்கண்னை காணலாம்.

திருமழிசை ஆழ்வார், திருக்குடந்தை ஆராவமுதனை ஸேவிக்க விரும்பி, திருக்குடந்தை செல்லும் வழியில், பெரும்புலியூர் என்ற இடத்தில் ஓய்வெடுக்க ஒரு இடத்தில் தங்கினார். அங்கு அப்பொழுது சில அந்தணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். வேற்று மனிதர் ஒருவர் வந்து அமர்ந்ததைக் கண்ட அந்த அந்தணர்கள் வேதம் ஓதுவதை நிறுத்திக் கொண்டனர். இதனை உணர்ந்து கொண்ட ஆழ்வாரும் அவ்விடத்தை விட்டு கிளம்ப, அந்தணர்கள் மீண்டும் வேதம் ஓத விழைந்தனர். ஆனால் அவர்கள் எந்த இடத்தில் தாங்கள் நிறுத்திய வேத மந்திரத்தை தொடங்குவது என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். இதனி கண்ட திருமழிசை ஆழ்வார், அவர்கள் தொடங்க வேண்டிய மந்திரத்தை உணர்த்த ஒரு விதையை எடுத்து அதனை உரித்து காண்பித்து, பூடகமாக எந்த இடத்தில் அவர்கள் வேத மந்திரத்தை தொடங்க வேண்டும் என்று சைகை காட்டினார். தங்கள் தவறினை புரிந்து கொண்ட அந்த அந்தணர்கள் , திருமழிசை ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு, அவரையும் வேத கோஷ்டியில் கலந்து கொள்ள வேண்டினர்.

பின்னர் திருக்குடந்தைக்குச் சென்று அங்கு ஸ்ரீ.ஆராவமுதனை சேவிக்கும் பொழுது, கிடந்த நிலையில் இருந்த பெருமாள் , எழுந்திருக்க முயலும் பொழுது, ஆழ்வார் அவரை அப்படியே இருக்க வேண்ட, பெருமாளும் , கிடந்த நிலையில் இல்லாமலும், எழுந்த நிலையிலும் இல்லாமல் , அப்படியே கிடந்திருந்து எழுந்த நிலையிலேயே ஆழ்வாருக்கு ஸேவை ஸாதித்தார். அவருக்கு ஸேவை ஸாதித்த நிலையிலேயே , திருக்குடந்தை ஆராவமுதன் இன்றும் எல்லோருக்கும் காட்சி அளிக்கிறார். இதனைப் பற்றி திருச்சந்தவிருத்தத்தில் இவர் அருளிய பாசுரம்

" நடந்த கால்கள் நொந்தவோ * நடுங்க ஞாலம் ஏனமாய் *
  இடந்த மெய் குலுங்கவோ * விலங்கு மால்வரைச் சுரம் *
  கடந்த கால் பரந்த * காவிரிக் கரை குடந்தையுள் *
  கிடந்தவாறு எழுந்திருந்து * பேசு வாழி கேசனே * ( பாசுரம் - 61 ).

திருமழிசை ஆழ்வார் பெரும்பாலும் யோக நிஷ்டையிலேயே ஆழ்ந்திருப்பார். அப்படி இருக்கும் சமயத்தில் , ஒரு மாயாவாதி அவரிடம் வந்து, எந்த ஒரு பொருளையும் தன்னிடம் கொடுத்தால், அதனை தான் தங்கமாக மாற்றித் தருவதாகக் கூற, அவனிடம், தன் காதில் உள்ள குறும்பை குடைந்தெடுத்து, அதை தங்கமாக மாற்றி அவனிடம் கொடுத்தார். இவரின் இந்த அற்புத சக்தி அளவிடற்கறியது.

ஸ்ரீமன் நாராயணனின் மேல் மிகுந்த பக்தியும் , ஈடுபாடும் கொண்டு, திருமழிசை ஆழ்வார், இரண்டு பிரபந்தங்களை இயற்றினார். 120 பாசுரங்களைக் கொண்ட திருச்சந்தவிருத்தமும், 96 பாசுரங்களைக் கொண்ட நான்முகன் திருவந்தாதியும் இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள். நான்முகன் திருவந்தாதியில் , இவர் இருந்த பல் வேறு சமயங்களைப் பற்றி குறிப்பிட்டு, ஸ்ரீமன் நாராயணனே எல்லோர்க்கும் தெய்வம் என்று அருளுகின்றார்.

இப்பூவுலகிலே நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் திருமழிசை ஆழ்வார்.


( திருமழிசை ஆழ்வார், ஸ்ரீரங்கம், ஸ்ரீ பெரிய பெருமாள் திருக்கோயில் )


ஸ்வாமி மணவாள மாமுனிகள், தம் உபதேச ரத்னமாலையில், திருமழிசை ஆழவாரின் சிறப்பை ஒரு பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார். " தையில் மகம் இன்று தாரணியில் ஏற்றம், இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன், துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாளென்று, நற்றவர்கள் கொண்டாடும் நாள் "
தை மாதம் மகம் நக்ஷத்திரத்திலே, திருமழிசை ஆழ்வார் அவதரித்த காரணத்தினாலே, இந்த தை மாத மகம் நக்ஷத்திரம் உலகத்திலேயே ஏற்றம் பெற்றது என்று குறிப்பிடுகின்றார்.

திருமழிசை ஆழ்வாரின் வாழி திருநாமம் :

" அன்புடன் அந்தாதி தொன்னூற்றாருரைத்தான் வாழியே *
  அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே *
  இன்பமிகு தையில் மகத்திங்கு உதித்தான் வாழியே *
 எழில் சந்தவிருத்தம் நூற்றிபது ஈந்தான் வாழியே *
 முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே *
 முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதர்ந்த சொல்லோன் வாழியே *
 நன் புவி நாலாயிரத்து எழுநூற்றிருந்தான் வாழியே *
 நங்கள் பத்திசாரர் இரு நற் பதங்கள் வாழியே * "


திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்.